×

சாத்தான்குளம் அருகே வேலன்புதுக்குளம் வழியாக இயங்கிய பஸ்கள் மாயம்

*கிராம மக்கள் கடும் அவதி

சாத்தான்குளம் : சாத்தான்குளம் அருகே வேலன்புதுக்குளம் வழியாக இயக்கப்பட்ட அரசு பஸ்கள், வெள்ள பாதிப்புக்கு பிறகு திடீரென நிறுத்தப்பட்டு மாயமானதால் கிராம மக்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர்.நெல்லையில் இருந்து சாத்தான்குளம் வழியாக 3 மார்க்கமாக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் சாத்தான்குளத்தில் இருந்து நெடுங்குளம், வேலன்புதுக்குளம், கலுங்குவிளை, மேல செட்டிக்குளம், காரியாண்டி வழியாக நெல்லை செல்வது ஒரு வழியாகும்.

ஒதுக்குப்பற ஊரான வேலன்புதுக்குளம் வழியாக காலை, மாலை 165 ஜெ, 65ஏ ஆகிய தடம் எண் அரசு பஸ்சும், திருச்செந்தூரில் இருந்து சாத்தான்குளம் வழியாக பழனியப்பபுரம் செல்லும் டவுன் பஸ்சும் இயக்கப்பட்டு வந்தன. இதன் மூலம் கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் பெரிதும் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் கடந்த டிசம்பரில் பெய்த கனமழைககு இந்த ஊரை சுற்றி வெள்ளம் சூழ்ந்ததில் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சாலைகளும் துண்டிக்கப்பட்டன.

அதன்பிறகு வேலன்புதுக்குளம் வழியாக சென்று 3 அரசு பஸ்களும் நிறுத்தப்பட்டன. இவ்வாறு 3 பஸ்களும் திடீரென மாயமானதால் கிராம மக்கள் பெரிதும் ஏமாற்றமடைந்து உள்ளதோடு கடுமையாக அவதிப்படுகின்றனர். இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு முறைப்படி கடிதம் மூலம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். தங்கள் ஊர் வழியாக இயக்கப்பட்ட 3 பஸ்களும் இயக்கப்படாததால் கிராம மக்கள் சாத்தான்குளம், நெல்லை, உள்ளிட்ட பிற ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் இதர வாகனங்களில் சென்று திரும்ப வேண்டியுள்ளதாக வேதனை தெரிவித்து உள்ளனர்.

எனவே அதிகாரிகள் இதனை கவனித்து நிறுத்தப்பட்ட அரசு பஸ்களை மீண்டும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.மேலும் இப்பகுதியில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகளும் இன்னும் சீரமைக்கப்படாதது குறித்து கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுககு மனுவும் அனுப்பி உள்ளனர்.

The post சாத்தான்குளம் அருகே வேலன்புதுக்குளம் வழியாக இயங்கிய பஸ்கள் மாயம் appeared first on Dinakaran.

Tags : Velanputhukulam ,Satankulam ,Nellai ,Dinakaran ,
× RELATED உளவியல் ஆலோசனை கூட்டம்