×

பரங்கிப்பேட்டை அருகே சின்னவாய்க்கால் முகத்துவாரத்தை தூர்வார கோரி மீனவர்கள் திடீர் சாலை மறியல்

புவனகிரி, ஜன. 23: பரங்கிப்பேட்டை அருகே உள்ள கிள்ளை சின்னவாய்க்கால் மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்செல்வம், தயாளமூர்த்தி ஆகிய இருவரும் கடந்த 19ம் தேதி மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். மீன் பிடித்து விட்டு வரும்போது முகத்துவாரத்தில் படகு தரை தட்டி கடலில் கவிழ்ந்தது. இதில் 2 மீனவர்கள் உயிரிழந்தனர். அப்போது முகத்துவாரத்தை தூர்வார வேண்டுமென பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் அவர்களை சமரசம் செய்தனர். இந்நிலையில் முகத்துவாரத்தை ஆழப்படுத்தும் பணி துவங்காததால் நேற்று கிராம மீனவர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டம் நடத்தினர். சின்னவாய்க்கால் பில்லுமேடு, கிள்ளை, எம்.ஜி.ஆர் நகர், தளபதி நகர், சிசில் நகர் உள்ளிட்ட 6 மீனவ கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பிச்சாவரம் சுற்றுலா மையம் அருகே உள்ள சின்ன வாய்க்கால் கிராமத்திற்கு செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி மற்றும் போலீசார், அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சின்னவாய்க்கால் பகுதியில் முகத்துவாரம் தூர்வார நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் விரைவில் பணி துவங்கும் எனவும் உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் குறித்து கிராம மக்கள் கூறுகையில், சின்னவாய்க்கால் முகத்துவாரம் தூர்வாரப்படாததால் தினமும் கடலுக்கு சென்று வருவது பெரிய போராட்டமாக இருக்கிறது. அவ்வாறு கடலுக்கு செல்லும்போது படகு கவிழ்ந்து உயிரிழப்பும் ஏற்படுகிறது. அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதால் முகத்துவாரத்தை உடனடியாக தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும், என்றனர்.

The post பரங்கிப்பேட்டை அருகே சின்னவாய்க்கால் முகத்துவாரத்தை தூர்வார கோரி மீனவர்கள் திடீர் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Chinnawaikal estuary ,Barangippet ,Bhuvangiri ,Meenavarselvam ,Dayalamoorthy ,Killai Chinnawaikal ,Parangippet ,Dinakaran ,
× RELATED தேசிய நெடுஞ்சாலையில் தடுப்பு அமைக்கும் பணிக்கு மக்கள் எதிர்ப்பு