×

ஆப்கானில் ரஷ்ய விமானம் விபத்து 2 பேர் பலி, 4 பேர் மீட்பு: தலிபான்கள் தகவல்

இஸ்லாமாபாத்: ஆப்கானில் ரஷ்யாவின் தனியார் விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில்,2 பேர் பலியாகினர்.4 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்று தலிபான்கள் தெரிவித்தனர். ரஷ்யாவில் பதிவு செய்யப்பட்ட தனியார் மருத்துவ பயன்பாட்டு விமானம் கடந்த சனிக்கிழமையன்று தாய்லாந்து பட்டாயா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மாஸ்கோ, ஜூகோவ்ஸ்கி சர்வதேச விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்றது. ஆப்கானிஸ்தான், படாக்‌ஷான் மாகாண மலை பகுதியில் விமானம் நொறுங்கி விழுந்ததாக செய்தி வெளியானது.

இது குறித்து பேசிய ரஷ்ய விமான போக்குவரத்து துறை அதிகாரிகள்,‘‘ ரஷ்ய விமானம் ஒன்று ஆப்கானிஸ்தான் வான்வெளியில் பறந்து கொண்டிருந்த நிலையில், ரேடார் கண்காணிப்பில் இருந்து காணாமல் போனது. விமானத்தில் 4 ஊழியர்கள், 2 பயணிகள் இருந்தனர்’’ என்றனர். இந்நிலையில், தலிபான் செய்தி தொடர்பாளர் சபிஹூல்லா முஜாகித் நேற்று தனது சமூக வலைதள பக்கத்தில்,விமான விபத்து நடந்த இடத்தில் இருந்து மீட்கப்பட்ட 4 பேர் குறித்த வீடியோவை வெளியிட்டிருந்தார். 4 பேரின் உடல் நலம் நன்றாக இருப்பதாகவும், முதலுதவி அளிக்கப்பட்ட உடன் 4 பேரும் காபூலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என குறிப்பிட்டுள்ளார். உள்ளூர் அதிகாரிகள் கூறுகையில், ‘‘இது குறித்து தகவல் கிடைத்ததும் மீட்பு படைகள் அங்கு அனுப்பப்பட்டன.

விமானம் விழுந்த இடத்தில் 2 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன’’ என்றனர். 2021ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சி ஏற்பட்ட பிறகு ஆப்கானிஸ்தான் வான்வெளியை பயன்படுத்துவதை சர்வதேச விமான நிறுவனங்கள் தவிர்த்து வருகின்றன. எமிரேட் விமான நிறுவனம் காபூலுக்கு விமான சேவையை சமீபத்தில் தொடங்கியுள்ளது.

The post ஆப்கானில் ரஷ்ய விமானம் விபத்து 2 பேர் பலி, 4 பேர் மீட்பு: தலிபான்கள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Taliban ,ISLAMABAD ,AFGHANISTAN ,Russia ,Thailand ,Pattaya International Airport ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தானில் X தளத்திற்கு தடை:...