×

தனியார் மண்டபங்களில் பூஜைகளை ஒளிபரப்ப போலீஸ் அனுமதி தேவையில்லை கடவுள் பக்தி அமைதி, மகிழ்ச்சிக்கு தானே தவிர சமூகத்துக்கு தொந்தரவு செய்வதற்கு அல்ல: ராமர் கோயில் குடமுழுக்கு பஜனைக்கு அனுமதி கோரிய வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ராமர் கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சியை தனியார் கோயில்கள் மற்றும் திருமண மண்டபங்களில் நேரலை ஒளிபரப்பு செய்ய போலீசார் அனுமதி தேவையில்லை என்று தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், கடவுள் பக்தி என்பது அமைதி, மகிழ்ச்சியை ஏற்படுத்த தானே தவிர சமூகத்திற்கு தொந்தரவு தருவதற்காக அல்ல என்று கருத்து தெரிவித்துள்ளது. அயோத்தியில், ராமர் கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சியை முன்னிட்டு, சென்னை பட்டாபிராமில் உள்ள தனியார் மண்டபத்தில் பஜனைகள், அன்னதானம் நடத்த அனுமதி மறுத்த காவல் துறையினரின் உத்தரவை எதிர்த்து விவேகானந்தா இந்து இயக்கம் சார்பில் அதன் தலைவர் கணபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், அயோத்தி செல்ல இயலாத பக்தர்களுக்காக பஜனை, அன்னதான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நிலையில் அனுமதி பெறவில்லை எனக் கூறி நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என்று போலீசார் அறிவுறுத்தினர். பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படக் கூடும் எனவும் கூறி அனுமதி மறுத்து நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனியார் மண்டபத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் எந்த மதத்தை பற்றியும் விவாதிக்கவில்லை. மற்ற மதத்தினர் வசிக்கும் பகுதி என்பதால் இந்த நிகழ்ச்சியை தடுக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை அவசர வழக்காக நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் நேற்று காலை தனது அறையில் விசாரித்தார். அப்போது மனுதாரருக்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி, தனியார் கோயில்கள் மற்றும் திருமண மண்டபங்களில் நேரலை ஒளிபரப்பு செய்யவோ அல்லது பூஜைகள் மேற்கொள்ளவோ போலீசார் அனுமதி தேவையில்லை. ஒருவேளை கூட்டம் அதிகரித்தால் அதனை கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம். இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் நேரலையோ அல்லது பூஜையோ மேற்கொள்ள வேண்டுமென்றால் கோயில் செயல் அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

பின்னர் உரிய கட்டுப்பாடுகளுடன் செயல் அலுவலர் அனுமதி அளிக்க வேண்டும் என்று காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. எனவே, பஜனைகள், அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்துவதில் சட்டம்- ஒழுங்குக்கு பங்கம் ஏற்படாதவாறு பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். இது தொடர்பாக தவறான தகவல்களை பரப்பக் கூடாது என்பதை அனைத்து கட்சிகளும் மனதில் கொள்ள வேண்டும். கடவுளைப் பார்த்து பக்தியுடன் வேண்டுவது அமைதி மற்றும் மகிழ்ச்சிக்காத்தானே தவிர, சமூகத்திற்கு உள்ள சமச்சீரான நிலைக்கு தொந்தரவு தருவதற்கல்ல என்பதை அனைவரும் மனதில் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

The post தனியார் மண்டபங்களில் பூஜைகளை ஒளிபரப்ப போலீஸ் அனுமதி தேவையில்லை கடவுள் பக்தி அமைதி, மகிழ்ச்சிக்கு தானே தவிர சமூகத்துக்கு தொந்தரவு செய்வதற்கு அல்ல: ராமர் கோயில் குடமுழுக்கு பஜனைக்கு அனுமதி கோரிய வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Ram Temple Kudamuzku ,Chennai ,Chennai High Court ,God ,High Court ,Ram Temple Kudamuzku Bhajan ,
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...