மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரை நடத்தி வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் 2024 ஐ மார்ச் 22 முதல் மே 26 வரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 17வது சீசன் மார்ச் 22 அன்று தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2009ம் ஆண்டு இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற போது ஐபிஎல் தொடர் தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டது. அதன் பிறகு 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது பாதி ஆட்டங்கள் ஐக்கிர அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. ஆனால் 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது அனைத்து இந்தியாவிலேயே ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டது.
இதனால் நடப்பாண்டு ஐபிஎல் தொடரும் இந்தியாவிலேயே முழுமையாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை விரைவில் வெளியிட பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாக குழு முடிவு செய்துள்ளது. தேர்தல் நடந்தாலும் இந்தியாவில் தான் ஐபிஎல் 2024 தொடர் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வரும் ஜூன் 1ம் தேதி டி20 உலகக் கோப்பை தொடர் நடக்க உள்ள நிலையில் மே 26ம் தேதி ஐபிஎல் இறுதிப் போட்டி நடக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மகளிர் பிரீமியர் லீக் தொடரை மும்பை மட்டுமல்லாமல் மேலும் 2 மாநிலங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் தொடர் வரும் பிப்.22 முதல் மார்ச் 17 வரை நடத்தவும், மும்பை, டெல்லி மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு விரிவுபடுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடருக்கான அட்டவணை, நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
The post நடப்பாண்டு ஐபிஎல் தொடரை மார்ச் 22 முதல் மே26 வரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் appeared first on Dinakaran.