×

மெட்ரோ ரயில் திட்ட பணிக்காக மயிலாப்பூர் பகுதியில் மீண்டும் போக்குவரத்து மாற்றம் அமல்: போலீசார் நடவடிக்கை

 

சென்னை, ஜன.22: சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிக்காக மயிலாப்பூர் பகுதியில் கடந்த 7ம் ேததி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, ராயப்பேட்டை நெடுஞ்சாலை (அஜந்தா சந்திப்பு ஆர்.கே.சாலை முதல் ராயப்பேட்டை நெடுஞ்சாலை வரை), ஆர்.கே.மடம் சாலை (லஸ் சந்திப்பு முதல் திருமயிலை எம்ஆர்டிஎஸ் வரை), ஆர்.கே.மடம் சாலை (திருவேங்கடம் தெரு சந்திப்பு முதல் கிரேஸ் சூப்பர் மார்க்கெட் வரை) ஆகியவை மூடப்பட்டது.

* ராயப்பேட்டை நெடுஞ்சாலை (அஜந்தா சந்திப்பு ஆர்.கே.சாலை முதல் ராயப்பேட்டை நெடுஞ்சாலை வரை)
ஜி.ஆர்.எச். பாயின்டில் இருந்து அஜந்தா சந்திப்பு வழியாக ஆர்.கே.சாலைக்கு (ராயப்பேட்டை முதல் சந்திப்பு வரை) வரும் வாகனங்கள் வி.பி.ராமன் சாலை – வலது – நீதிபதி ஜம்புலிங்கம் தெரு – வலது – ஆர்.கே.சாலை நோக்கி திருப்பி விடப்பட்டது.

* ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இருந்து ஜி.ஆர்.எச். நோக்கி வரும் வாகனங்கள் – ராயப்பேட்டை பாலம் சர்வீஸ் சாலை- இடது நீலகிரிஸ் கடை – மியூசிக் அகாடமி சர்வீஸ் சாலை – வலது – டி.டி.கே சாலை – கவுடியா மடம் சாலை வரை செல்லும்.

* வி.பி.ராமன் சாலை (வி.எம். தெரு சந்திப்பு முதல் நீதிபதி ஜம்புலிங்கம் தெரு வரை), வி.எம்.தெரு, நீதிபதி ஜம்புலிங்கம் தெரு ஆகியவை அனைத்தும் ஒரு வழிப்பாதையாக செயல்படும்.

* அஜந்தா சந்திப்பில் இருந்து அதிமுக கட்சி அலுவலகம் வழியாக இந்தியன் வங்கி சந்திப்பு வரை கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

* ஆர்.கே.மடம் சாலை (லஸ் சந்திப்பு முதல் திருமயிலை எம்ஆர்டிஎஸ் வரை)

* ஆர்.கே.சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக மந்தைவெளி சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் லஸ் சந்திப்பில் திருப்பி விடப்படும் – வலது லஸ் சர்ச் சாலை- டி சில்வா சாலை – பக்தவச்சலம் தெரு- வாரன் சாலை- செயின்ட் மேரி சாலை – இடதுபுறம் திரும்பி – சி.பி ராமசாமி சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

* ஆர்.கே.மடம் சாலையில் இருந்து ராயப்பேட்டை நெடுஞ்சாலை நோக்கி வரும் வாகனங்கள், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் (சாய்பாபா கோயில் தெரு) -இடதுபுறம் – ரங்கா சாலை – வலது – கிழக்கு அபிராமபுரம் 1வது தெரு- லஸ் அவென்யூ – லஸ் சர்ச் சாலை வழியாக – பி.எஸ்.சிவசாமி சாலை – வலது – சுலிவன் கார்டன் தெரு – இடது – ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.

* கிழக்கு மாட தெரு, வெங்கடேச அக்ரகாரம் தெரு (சாய்பாபா கோவில் தெரு), டாக்டர்.ரங்கா சாலை முதல் கிழக்கு அபிராமபுரம் 1வது தெரு, லஸ் அவென்யூ 1வது தெரு, லஸ் அவென்யூ, முண்டககன்னியம்மன் கோயில் தெரு ஆகியவை அனைத்து வாகனங்களுக்கும் ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்படும்.
* சி.பி.கோயில் சந்திப்பில் இருந்து ஆர்.கே.மடம் சாலை சந்திப்பு வரை வடக்கு மாட தெரு வரை இரு வழிப்பாதையாக அனுமதிக்கப்படும்.

* மயிலாப்பூரில் இருந்து ஆர்.கே.மடம் சாலை வழியாக புறப்படும் எம்டிசி மினி பேருந்துகள் மந்தைவெளி தபால் நிலையம்- மந்தைவெளி தெரு- வலது- நார்டன் சாலை – இடதுபுறம் திரும்பி – தெற்கு கால்வாய் கரை சாலையில் இடதுபுறமாக செல்ல அனுமதிக்கப்பட்டது.

* ஆர்.கே.மடம் சாலை (திருவேங்கடம் தெரு சந்திப்பு முதல் கிரேஸ் சூப்பர் மார்க்கெட் வரை)

* வாரன் சாலையில் இருந்து வரும் வாகனங்கள்- வலதுபுறம் திரும்பி – செயின்ட் மேரிஸ் சாலை – இடதுபுறம் திரும்பி – சி.பி ராமசாமி சாலை – காளியப்பா சந்திப்பு – நேராக ஆர்.ஏ.புரம் 3வது குறுக்கு தெரு சென்று – காமராஜர் சாலை – ஸ்ரீநிவாசா அவென்யூ – கிரீன்வேஸ் சந்திப்பை நோக்கி ஆர்.கே.மடம் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

* கிரீன்வேஸ் சந்திப்பில் இருந்து மந்தைவெளி வரும் வாகனங்கள் ஆர்.கே.மடம் சாலை – இடது – திருவேங்கடம் தெரு – திருவேங்கடம் தெரு விரிவாக்கம் – வி.கே.ஐயர் சாலை – தேவநாதன் தெரு – வலது – செயின்ட் மேரிஸ் சாலை – இடது – ஆர்.கே.மடம் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

* மந்தைவெளி செல்லும் எம்டிசி பேருந்துகள் – வாரன் சாலை இடதுபுறம் – செயின்ட் மேரிஸ் சாலை – வலதுபுறம் திரும்பி – சிருங்கேரி மட சாலை மற்றும் வி.கே.ஐயர் சாலை வழியாக மந்தைவெளி பேருந்து நிலையத்தை அடையலாம்.

* ஸ்ரீனிவாசா அவென்யூ, திருவேங்கடம் தெரு, திருவேங்கடம் தெரு எக்ஸ்டிஎன், பள்ளி சாலை, ஆகியவை ஒருவழிப்பாதையாக செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் முறையாக அறிவிப்பு பலகைகள் இன்றியும், சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றாமலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து திருமயிலை வியாபாரிகள் சங்கம் மற்றும் மயிலாப்பூர் பகுதி மக்கள் லஸ் கார்னர் பகுதியில் போராட்டம் நடத்தினர்.

அப்போது, மூடப்பட்ட சாலைகளில் பாதசாரிகள் நடந்து செல்லும் வகையில் இருபுறங்களிலும் 5 அடிக்கு பாதை ஏற்படுத்தி தர வேண்டும். பொங்கல் பண்டிகையால் ஒரு வாரம் இந்த போக்குவரத்து மாற்றத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்ற மெட்ரோ நிர்வாகம், போக்குவரத்து மாற்றத்தை ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைத்தது. இந்நிலையில், ஒரு வார காலம் முடிந்ததை தொடர்ந்து நேற்று முதல் மீண்டும் மயிலாப்பூர், ராயப்பேட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் அறிவிப்பு பலகைகளை போக்குவரத்து போலீசார் வைத்துள்ளனர்.

* ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட சாலைகளில் ஆக்கிரமிப்புகள் இன்னும் அப்படியே உள்ளது. எனவே போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட சாலைகளின் இருபுறங்களில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த போக்குவரத்து போலீசாருக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேநேரம், லஸ் கார்னர் முதல் ஜெயின் கோயில் வரையிலான கச்சேரி சாலையில் இலகு ரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. எனவே லஸ் கார்னர் முதல் ஜெயின் கோயில் வரை ஆயிரக்கணக்கான குடியிருப்புவாசிகள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் தங்களது வாகனங்களை எடுத்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே குடியிருப்பு வாசிகள் மற்றும் தனியார் நிறுவன வாகனங்கள் லஸ் கார்னர் வரை செல்ல போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post மெட்ரோ ரயில் திட்ட பணிக்காக மயிலாப்பூர் பகுதியில் மீண்டும் போக்குவரத்து மாற்றம் அமல்: போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Mylapore ,Chennai ,Rayapetta Highway ,Ajanta Junction RK Road ,RK Madam ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மைய பகுதிகள் ‘சிவப்பு’ மண்டலம் காவல் துறை அறிவிப்பு