செங்கல்பட்டு, ஜன. 22: வடகால் கிராமத்தில் முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று சிறப்பாக நடைப்பெற்றது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்று அம்மனை வழிபட்டனர். செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் ஊராட்சி வடகால் கிராமத்தில் சுமார் 77 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ முத்து மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில், சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கோயில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று முன்தினம் பாலாற்றில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டது.
அதைத் தொடர்ந்து கோயில் அருகே பிரத்யேகமாக யாக சாலை அமைக்கப்பட்டு, முதல் மற்றும் இரண்டு கால யாக வேள்வி நடைபெற்றது. அதை தொடர்ந்து யாக வேள்விக்கும், யாக சாலையில் அமைக்கப்பட்டிருந்த புனித கலசத்திற்கும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. மேலும், மேள தாளங்கள் முழங்க இரண்டு கால யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனிதத் தீர்த்தத்தை கோயிலின் சிவாச்சாரியார் தலையில் சுமந்து கோபுர கலசத்தை வந்தடைந்தார்.
அதனை தொடர்ந்து, ‘ஓம் சக்தி, பராசக்தி’ என்ற கோஷத்துடன் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் கோபுர கலசத்திற்கு மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. அப்போது, ஏராளமான பெண்கள், ஆண்கள் பக்தி பரவசம் ஏற்பட்டு சாமி ஆடினர். இந்த கும்பாபிஷேகம் விழாவில் ஆத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கவுதம் மற்றும் செங்கல்பட்டு சுற்றியுள்ள 500க்கும் மேற்பட்ட கிராமமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.
The post வடகால் கிராமத்தில் முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.