சென்னை: புதுச்சேரி ஜிப்மரில் அரைநாள் விடுமுறையை எதிர்த்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. ராமர் கோயில் விழாவை ஒட்டி ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை அரை நாள் விடுமுறை அறிவிப்பை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. முக்கியமான அறுவை சிகிச்சைகள் நாளை திட்டமிடப்படவில்லை என்று ஒன்றிய அரசின் வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் விளக்கம் அளித்துள்ளார்.
வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் விளக்கத்தை ஏற்று வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. இதை தொடர்ந்து, அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி, ஜன.22ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மதியம் 2.30 மணி வரை செயல்படாது. அவசர சிகிச்சைப் பிரிவு மட்டுமே செயல்படும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ராமர் கோயில் திறப்பு விழாவுக்காக நாளை அறிவித்திருந்த விடுமுறையை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வாபஸ் பெற்றது. அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்காக மருத்துவமனைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. கடும் எதிர்ப்பை அடுத்து விடுமுறை என்ற அறிவிப்பை திரும்பப்பெறுவதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை சுற்றறிக்கை அனுப்பியது.
The post புதுச்சேரி ஜிப்மரில் அரைநாள் விடுமுறையை எதிர்த்த வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்! appeared first on Dinakaran.