×

காஞ்சிபுரத்தில் பதறவைக்கும் சம்பவம் மாநகராட்சி பள்ளி குடிநீர் தொட்டியில் இறந்து கிடந்த நாய்: ¢ மர்ம நபர்கள் அடித்துக்கொன்று வீசினர் ¢ அதிகாரிகள் விசாரணை

காஞ்சிபுரம், ஜன. 21: காஞ்சிபுரம் மாநகராட்சிப் பள்ளி குடிநீர் தொட்டியில் இறந்து கிடந்த நிலையில் நாய் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்மநபர்கள் அடித்துக்கொன்றுவிட்டு, நாயின் சடலத்தை இந்த குடிநீர் தொட்டிக்குள் வீசிச் சென்றுள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் பஸ் நிலையம் பின்புறம் சீனிவாசா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் நீதிமன்றமும் இயக்கி வருகிறது. இந்நிலையில் நேற்று பள்ளி வளாகத்தில் உள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியில் தூர்நாற்றம் வீசியது. இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் மாணவர்கள் தெரிவித்தனர். உடனே பள்ளி நிர்வாகத்தினர், மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து குடிநீர் தொட்டியை பார்த்தபோது, அந்த தொட்டியில் இறந்தநிலையில் நாய் ஒன்று கிடந்தது. இதனால் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

மர்ம நபர்கள் நாயைக் கொன்று, அதன் சடலத்தை இந்த மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியின் குடிநீர் தொட்டிக்குள் வீசியது தெரியவந்தது. இதனையடுத்து நாயின் சடலத்தை அப்புறப்படுத்திய மாநகராட்சி ஊழியர்கள், பிளீச்சிங் பவுடர் போட்டு குடிநீர் ெதாட்டியை சுத்தம் செய்தனர். மேலும் நாயைக் கொன்று பள்ளி குடிநீர் தொட்டியில் வீசியது யார்? எதற்காக இதனை செய்தனர்? என்ற பல்வேறு கோணங்களில் மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சீனிவாசா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கதவு, கண்காணிப்பு கேமரா போன்ற எந்த வசதியும் இல்லை. மேலும் இரவு காவலரும் பணியில் அமர்த்தப்படவில்லை. இதனால் பள்ளி வளாகத்தில் மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை உடைத்துவிட்டுச் செல்கின்றனர்.

மேலும் சீட்டு விளையாடுவது போன்ற குற்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர். மர்ம நபர்கள் வேண்டுமென்றே நாயைக் கொன்றுவிட்டு, அதன் சடலத்தை குடிநீர் தொட்டியில் வீசிவிட்டுச் சென்றிருக்கலாம். நாய் இறந்து கிடந்த தொட்டியிலிருந்து தண்ணீரை மாணவர்கள் குடித்திருந்தால், அவர்களுக்கு பல்வேறு உடல்நலக் கோளாறு ஏற்பட்டிருக்கும். போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்\” என்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இதேபோல், உத்திரமேரூர் அடுத்த திருவந்தவார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் குடிநீர் தொட்டிக்குள் மனிதக் கழிவு இருப்பதாக சர்ச்சை வெடித்தது. இதனையடுத்து கலெக்டர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்ததில், குடிநீர் தொட்டிக்குள் கிடந்தது மனிதக் கழிவு இல்லை, பறவைகளின் முட்டை ஓடு என்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் பள்ளியின் குடிநீர் தொட்டி இடித்து அகற்றப்பட்டு, அங்கு புதிய குடிநீர் தொட்டி கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் தற்போது இந்த மாநகராட்சி பள்ளியின் குடிநீர் தொட்டிக்குள் நாய் இறந்து கிடந்த சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

The post காஞ்சிபுரத்தில் பதறவைக்கும் சம்பவம் மாநகராட்சி பள்ளி குடிநீர் தொட்டியில் இறந்து கிடந்த நாய்: ¢ மர்ம நபர்கள் அடித்துக்கொன்று வீசினர் ¢ அதிகாரிகள் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Kanchipuram Municipal School ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்...