×

அரசு விரைவு பேருந்து கட்டணம் மாற்றி அமைப்பு அனைத்து போக்குவரத்து கழகத்திலும் ஒரே கட்டணம்: அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகத்தில் 8 போக்குவரத்து கழகங்கள் மூலம் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் மாநகர போக்குவரத்து கழகம் மட்டுமே சென்னையில் நகர பேருந்துகளை இயக்குகிறது. அரசு விரைவு போக்குவரத்து கழகம் முழுமையாக விரைவு பேருந்துகளையும், மற்ற 6 போக்குவரத்து கழகங்கள் அதன் கோட்டத்திற்குள் நகர பேருந்துகளையும் கோட்டங்களுக்கு இடையே விரைவு பேருந்துகளையும் இயக்கி வருகிறது. இந்நிலையில், அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் புறவழிச்சாலைகளில் பெரும்பாலும் இயக்கப்படுவதால் குறைவான தூரம் இருக்கும். மற்ற போக்குவரத்து கழக பேருந்துகள் ஊர்களுக்கு இடையே இயக்கப்படுவதால் அதிக தூரம் இருக்கும். இதன் காரணமாக ஒரே ஊருக்கு போக்குவரத்து கழகங்கள் இடையே கட்டணம் மாறுபாடு இருந்தது. தற்போது ஒரு இடத்துக்கு அனைத்து போக்குவரத்து கழகத்திலும் ஒரே கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது: போக்குவரத்து கழகங்கள் இடையே ஒரே இடத்துக்கு வெவ்வேறு தூரம் கணக்கிடப்பட்டு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வந்தது. அரசு விரைவு போக்குவரத்து கழகம் குறைந்த கட்டணம் வசூலித்து வந்தது தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. பல்வேறு வழித்தடங்களில் கட்டணம் மறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்துகள் இயக்கபடுவதால் கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் வரை 35 கிலோ மீட்டர் தொலைவிற்கு கட்டணம் ஏற்கனவே குறைக்கப்பட்டது. எனவே இது அனைத்து கோட்ட பேருந்துகளுக்கும் கட்டணம் மறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரசு விரைவு போக்குவரத்துக்கழக பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதில் உண்மையில்லை. தற்போது தான் சரியான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post அரசு விரைவு பேருந்து கட்டணம் மாற்றி அமைப்பு அனைத்து போக்குவரத்து கழகத்திலும் ஒரே கட்டணம்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Govt Express ,Chennai ,Tamil Nadu ,Municipal Transport Corporation ,Government Rapid Transport Corporation ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...