×

கோடை சீசனை முன்னிட்டு தொட்டபெட்டா தேயிலை பூங்கா தயாராகி வருகிறது

ஊட்டி: கோடை சீசனுக்காக ஊட்டி அடுத்துள்ள தொட்டபெட்டா தேயிலை பூங்கா தயாராகி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை காலமான ஏப்ரல் மட்டு மே மாதங்களில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகின்றனர். இதனால், சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பூங்காக்களும் தயார் செய்யப்படும். இதற்காக ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, தொட்டபெட்டா தேயிலை பூங்கா, காட்டேரி பூங்கா உட்பட அனைத்து பூங்காக்களிலும் முன்னதாக மலர் நாற்றுகள் நடவு செய்யப்படும். அந்த நாற்றுகளில் ஏப்ரல், மே மாதங்களில் பல வண்ணங்களில் மலர்கள் பூத்து குளுங்கும். அதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வது வழக்கம். இந்த நிலையில், கோடை சீசனுக்காக தோட்டக்கலைத் துறை சார்பில் தற்போது அனைத்து பூங்காக்களையும் தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ஊட்டி தாவரவியல் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதனை பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் குன்னூர் சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி பூங்காவிலும் நாற்று நடவு பணிகள் துவங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில், ஊட்டி அடுத்து உள்ள தொட்டபெட்டா தேயிலை பூங்காவிலும் கோடை சீசனுக்காக மலர் நாற்றுக்கள் உற்பத்தி மற்றும் நடவு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் பூங்கா பாதைகளில் நடவு செய்வதற்காக மேரி கோல்ட் மற்றும் உட்லண்ட்ஸ் மலர் செடிகள் உற்பத்தி செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஓரிரு நாட்களில் இந்த மலர் செடிகள் அனைத்தும் பூங்காவில் உள்ள பாத்திகளில் நடவு செய்யப்படும் என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேயிலை பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த அழகிய மலர்கள் செடிகளில் பூக்கும் வண்ணமயமான மலர்களை கண்டு ரசிக்கலாம்.

The post கோடை சீசனை முன்னிட்டு தொட்டபெட்டா தேயிலை பூங்கா தயாராகி வருகிறது appeared first on Dinakaran.

Tags : Thottapetta ,Tea Park ,Ooty ,Thottapetta Tea Park ,Nilgiris district ,
× RELATED சின்கோனா பகுதியில் 3 காட்டுமாடுகள் உயிரிழப்பு