×

24 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டனரா? பாஜவின் இன்னொரு பொய் மூட்டை: காங்.குற்றச்சாட்டு

புதுடெல்லி: கடந்த 9 ஆண்டுகளில் 24.82 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீண்டனர் என்ற நிதி ஆயோக்கின் அறிக்கை பாஜவின் இன்னொரு பொய் மூட்டை என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவில் 2022-23 தொடர்பான பல பரிமாண வறுமை பற்றி நேற்று முன்தினம் நிதி ஆயோக் அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 9 ஆண்டுகளில் 24.82 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர் என்றும் உபி.,பீகார், மத்திய பிரதேசத்தில் வறுமை விகிதம் கணிசமாக குறைந்ததே இதற்கு காரணம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநேட் நேற்று கூறுகையில், நாட்டில் 24.82 கோடி பேர் வறுமையில் இருந்து மீண்டு வந்துள்ளனர் என்பது பாஜ அரசின் லேட்டஸ்ட் பொய் மூட்டைகளில் ஒன்று. மக்களவை தேர்தல் வரை இதுபோன்று பல பொய் மூட்டைகள் அவிழ்த்துவிடப்படும். வறுமை குறித்து நிதி ஆயோக் எவ்வாறு கணக்கிட்டது என்பது தெரியவில்லை. உலக வங்கியோ, சர்வதேச நாணய நிதியம் ஆகியவை இது பற்றி தகவல் எதுவும் வெளியிடவில்லை. நிதி ஆயோக் தான் இது பற்றிய ஆய்வை மேற்கொண்டு, தகவலை வெளியிட்டுள்ளது.

ஆனால், உண்மை நிலை மிக மோசமாக உள்ளது. இந்த கணக்குகள் அனைத்தும் பாஜவின் பொய் மூட்டைகள். இந்த ஆய்வில் வேலை இல்லா பிரச்னையே இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், நாடு முழுவதும் வேலை இல்லா பிரச்னைகள், விலைவாசி உயர்வு, குறைந்த ஊதியம், அதிக அளவிலான வறுமை என மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர் என்பதுதான் நிஜம். வறுமை பட்டியலில் இருந்து 25 கோடி பேரை நீக்கி அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை பறிக்க சதி நடக்கிறது. அந்த மக்களுக்கு ரேசன் பொருள்கள் உள்ளிட்ட சலுகைகள் வழங்குவதை நிறுத்துவதற்கான திட்டமாகும் இது’’ என்றார்.

The post 24 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டனரா? பாஜவின் இன்னொரு பொய் மூட்டை: காங்.குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : BJP ,Congress ,New Delhi ,Niti ,India ,Dinakaran ,
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...