×

மஞ்சூர் பஜாரில் பரபரப்பு ராஜநடை போட்டு காட்டு மாடு உலா பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

மஞ்சூர் : மஞ்சூர் பஜாரில் ‘ராஜநடை’ போட்டு உலா வந்த காட்டு மாட்டை கண்டு பீதியில் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். நீலகிரி மாவட்டம், மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் சமீப காலமாக வன விலங்குகளின் நடமாட்டம் மிகுதியாக உள்ளது. குறிப்பாக கரடி மற்றும் காட்டு மாடுகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. அவ்வப்போது சிறுத்தைகளும் பஜார் பகுதியில் கடைகளின் முன்பு படுத்து கொண்டிருக்கும் தெருநாய்களை கொன்று தூக்கி செல்வதும் வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை மஞ்சூர் பஜார் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்துத்தும் மிகுதியாக காணப்பட்டது. அப்போது கண்டிபிக்கை சாலையில் இருந்து வந்த ராட்சத காட்டு மாடு ஒன்று பஜாருக்குள் நுழைந்து ராஜநடை போட துவங்கியது. திடீரென காட்டு மாடு எதிரே வருவதை கண்ட பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர்.

வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் எதிரே வந்த வாகனங்களை பொருட்படுத்தாத காட்டு மாடு, மேல்பஜார் அரசு மேல்நிலைப்பள்ளி வழியாக கடைகள், குடியிருப்பு வழியாக சாலையில் ஒய்யாரமாக நடந்து சென்று சாலையோரத்தில் இருந்த ஒற்றையடி பாதையில் இறங்கி தேயிலை தோட்டத்திற்குள் சென்றது.

நடுரோட்டில் நடந்து சென்ற காட்டு மாட்டை பலரும் தங்களது செல்போன்களில் படம் பிடித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

The post மஞ்சூர் பஜாரில் பரபரப்பு ராஜநடை போட்டு காட்டு மாடு உலா பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : Manjoor Bazar ,Manjoor ,Manjoor bazaar ,Rajanadai ,Nilgiris district ,Manjur ,
× RELATED மஞ்சூரில் பணிமனையுடன் பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை