புதுடெல்லி: ‘சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் இந்திய பாரம்பரியம், கலாசாரத்தை பறைசாற்றும் கருப்பொருள் அடிப்படையில் 190 ‘பாரத் கவுரவ் ரயில்கள்’ இயக்கப்படும்,’ என ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இது குறித்து நேற்று அளித்த பேட்டி வருமாறு: இந்திய பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் எடுத்துரைக்கும் வகையில் ரயில்களை இயக்க வேண்டும் என்ற யோசனையை பிரதமர் மோடி தெரிவித்தார். எனவே, சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் இந்திய பாரம்பரியம், கலாசாரத்தை பறைசாற்றும் கருப்பொருள் அடிப்படையில் 190 பாரத் கவுரவ் ரயில்களின் சேவையை தொடங்க ரயில்வே முடிவு செய்துள்ளது. இந்த ரயில்களை இந்திய ரயில்வேயும், தனியார் துறையும் சேர்ந்து இயக்கும். இவை வழக்கமாக இயக்கப்படாமல், குறிப்பிட்ட கால இடைவெளியில் இயக்கப்படும். இதற்காக, 3,033 பெட்டிகள் அல்லது 190 ரயில்களை கருப்பொருள்களின் அடிப்படையில் அடையாளப்படுத்தி உள்ளோம். பயணிகள், சரக்கு ரயில்கள் பிரிவுக்கு அடுத்தபடியாக சுற்றுலா பிரிவில் இந்த ரயில்கள் இயக்கப்படும். இதற்கான விண்ணப்பங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களின் டிக்கெட் கட்டணத்தை சுற்றுலா அமைப்பாளர்கள் முடிவு செய்வார்கள். இதை ரயில்வே நிர்வாகம் கண்காணிக்கும். இந்த ரயில்களை இயக்க ஒடிசா, ராஜஸ்தான், கர்நாடகா, தமிழகம் ஆகிய மாநிலங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.இவ்வாறு அவர் கூறினார். …
The post இந்திய கலாசாரத்தை பறைசாற்றும் சுற்றுலாவை மேம்படுத்த 190 பாரத் கவுரவ் ரயில்: தமிழக அரசும் இயக்க விருப்பம் appeared first on Dinakaran.