×

ஆவடி மாநகராட்சியின் குப்பை வண்டிகள் எரிப்பு: மர்ம நபர்களுக்கு வலை


ஆவடி: ஆவடி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 2 குப்பை சேகரிக்கும் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இது மர்ம நபர்களின் கைவரிசையா அல்லது வேறு ஏதேனும் சதிச்செயலா என போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஆவடி மாநகராட்சிக்கு சொந்தமான பல்வேறு குப்பை சேகரிக்கும் வாகனங்கள், அந்தந்தப் பகுதிகளில் உள்ள மாநகராட்சி இடத்தில் நிறுத்தி வைத்து பராமரித்து, தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல் ஆவடி, பெரியார் நகரில் உள்ள ஆவடி மாநகராட்சிக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட குப்பை சேகரிக்கும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று மதியம் ஆவடி, பெரியார் நகரில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மாநகராட்சி மற்றும் தனியாருக்கு சொந்தமான 2 குப்பை சேகரிக்கும் வாகனங்களில் மர்ம நபர்கள் தீவைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனால் அந்த 2 வாகனங்களும் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தன. மேலும், அருகே நின்றிருந்த பிற வாகனங்களிலும் தீப்பற்றி எரியும் சூழல் ஏற்பட்டது. இதுபற்றி தகவலறிந்ததும் ஆவடி தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் ஒரு மணி நேரத்துக்குமேல் போராடி, 2 குப்பை சேகரிக்கும் வாகனங்கள் மற்றும் பிற வாகனங்களில் பரவியிருந்த தீயை முற்றிலும் அணைத்தனர். எனினும், மாநகராட்சி மற்றும் தனியாருக்கு சொந்தமான 2 குப்பை சேகரிக்கும் வாகனங்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.

இதுகுறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், இதே பகுதியில் கடந்த ஆண்டு மாட்டு பொங்கலன்று இதேபோல் குப்பை அள்ளும் வாகனங்களை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர் எனத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து, மர்ம நபர்களின் கைவரிசையா அல்லது வேறு ஏதேனும் சதித்திட்டமா எனப் பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

The post ஆவடி மாநகராட்சியின் குப்பை வண்டிகள் எரிப்பு: மர்ம நபர்களுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Aavadi Corporation ,Avadi ,Avadi Municipal Corporation ,Dinakaran ,
× RELATED சென்னை ஆவடியில் சித்த மருத்துவர்...