×

வீட்டில் தனியாக இருந்த பெண் அடித்து கொலை

பென்னாகரம்: வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கைகளை கட்டிப் போட்டு சரமாரி அடித்து கொலை செய்து விட்டு தப்பியோடிய மர்ம நபர்களை, போலீசார் 6 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி சுமதி(45). கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்கிறார். அங்குள்ள அரசு மருத்துவமனையில் காசநோய் பிரிவில் தற்காலிக கிராமப்புற உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று வீட்டின் கதவு வெகு நேரமாக திறந்து கிடந்தது. அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது, வீட்டினுள் கைகள் கட்டப்பட்ட நிலையில், சுமதி சடலமாக கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர்.

தலையின் பின்பக்கத்தில் பலமாக தாக்கியதில் ரத்தம் பீறிட்டு வெளியேறி இருந்தது. மேலும், அவரது உடலில் பல இடங்களில் வெட்டு காயங்கள் இருந்தது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சுமதியின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது, நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில், அங்கு வந்த மர்ம நபர்கள், சுமதியை அடித்து கொலை செய்திருப்பது தெரிய வந்தது. பின்னர், சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, 6 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம். அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், சுமதியின் கைகளை கட்டி போட்டிருக்கலாம். தொடர்ந்து கடும் எதிர்ப்பு வலுத்ததால், அவரை அடித்து கொலை செய்தனரா? அல்லது பாலியல் பலாத்கார முயற்சியில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post வீட்டில் தனியாக இருந்த பெண் அடித்து கொலை appeared first on Dinakaran.

Tags : Bennagaram ,Gunasekaran ,Bennagaram Indira Nagar ,Dharmapuri district.… ,Dinakaran ,
× RELATED திருமணம் செய்துகொள்ள மறுப்பு...