×

கொடுத்த கடனை திருப்பி கேட்ட பெண் வியாபாரியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு

விருதுநகர், ஜன.13: விருதுநகர் கருப்பசாமி நகரை சேர்ந்தவர் மகாலட்சுமி (45). முருகன் கோவில் அருகில் கரும்பு சாறு வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு அருகில் சிவந்திபுரத்தை சேர்ந்த ஸ்டெல்லா என்பவர் தனியார் காபி விற்பனை செய்து வந்தார். இருவரும் நட்பாக பழகியுள்ளனர். அதன் அடிப்படையில் ஸ்டெல்லா மகன் திருமணத்திற்காக கடந்த பிப்.2023ல் ரூ.1.20 லட்சம் மகாலட்சுமி கடனாக கொடுத்துள்ளார். ஆனால் ஸ்டெல்லா 2 மாதங்கள் மட்டும் வட்டி கட்டியுள்ளார். அதன் பின்னர் வட்டி மற்றும் அசலை தராமல் இருந்துள்ளார்.

பலமுறை மகாலட்சுமி பணத்தை திரும்பக் கேட்டும் ஸ்டெல்லா தரவில்லை என்று தெரிகிறது. இதை தொடர்ந்து ஸ்டெல்லாவின் வீட்டிற்கு தனது கணவர் கருப்பசாமி, மகன் மணிகண்டன் ஆகியோருடன் சென்று பணத்தை கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த ஸ்டெல்லா, அவரது மகன் அந்தோணி எட்வின், மருமகள் ராதிகா, அந்தோணியின் நண்பன் ஆகியோர் ஸ்டெல்லாவுடன் சேர்ந்து மகாலட்சுமியை தரக்குறைவாக பேசி மகாலட்சுமியை தாக்கியுள்ளனர்.

மேலும் தடுக்க வந்த கருப்பசாமி, மணிகண்டனையும் தாக்கியதாகவும், அப்போது மணிகண்டன் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயின் காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் ஸ்டெல்லா உள்பட 4 பேர்மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதே வழக்கில் பணத்தை கேட்டு மகாலட்சுமி குடும்பத்தினர் தாக்கியதில் காயம் அடைந்ததாக கிழக்கு போலீசில் ராதிகா புகார் கொடுத்தார். அதன்பேரில் மகாலட்சுமி, கருப்பசாமி, மணிகண்டன் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post கொடுத்த கடனை திருப்பி கேட்ட பெண் வியாபாரியை தாக்கிய 4 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,Mahalakshmi ,Karuppasamy Nagar, Virudhunagar ,Murugan temple ,Stella ,Sivanthipuram ,
× RELATED விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...