×

மலேசிய விமானத்தில் வந்த தலைமறைவு குற்றவாளி கைது

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தில் நேற்றிரவு மலேசிய விமானத்தில் வந்திறங்கிய அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தலைமறைவு குற்றவாளி கைது செய்யப்பட்டார்.அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூமாலை (42). இவர்மீது கடந்த ஆண்டு அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு குற்ற வழக்கு பதிவாகியது. இவ்வழக்கு தொடர்பாக பூமாலையை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். மேலும் விசாரணையில், போலீசாரின் பிடியில் சிக்காமல் அவர் வெளிநாட்டுக்கு தப்பியோடி தலைமறைவாகி விட்டதாக தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, பூமாலையை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அரியலூர் மாவட்ட எஸ்பி அறிவித்து, இதுகுறித்து அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்ஓசி போடப்பட்டு இருந்தது.இந்நிலையில், சென்னை விமானநிலையத்தின் சர்வதேச முனையத்தில் நேற்றிரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஏர்ஏசியா பயணிகள் விமானம் தரையிறங்கியது. அதில் வந்த பயணிகளை விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி வைத்தனர். இதில் வந்த ஒரு நபரின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது பாஸ்போர்ட்டை குடியுரிமை அதிகாரிகள் கம்ப்யூட்டரில் வைத்து ஆய்வு செய்தபோது, அவர் அரியரால் லூர் மாவட்ட போலீசார் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என அதிகாரிகளுக்குத் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அவரை மடக்கி பிடித்து, சென்னை விமானநிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.இதுகுறித்து அரியலூர் மாவட்ட எஸ்பிக்கும் விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். விமானநிலைய சோதனையில் பிடிபட்ட தலைமறைவு குற்றவாளி பூமாலையை காவல் நிலையத்தில் வைத்துள்ளனர். இதைத் தொடர்ந்து, விமானநிலையத்தில் சிக்கியுள்ள பூமாலையை கைது செய்து, அரியலூர் கொண்டு செல்வதற்காக அம்மாவட்ட தனிப்படை போலீசார் வந்து கொண்டிருக்கின்றனர். இன்று மாலைக்குள் அவர் அரியலூர் போலீசாரால் கைது செய்யப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post மலேசிய விமானத்தில் வந்த தலைமறைவு குற்றவாளி கைது appeared first on Dinakaran.

Tags : Absconder ,Meenambakkam ,Ariyalur district ,Chennai airport ,Poomalai ,Dinakaran ,
× RELATED சேலம் விமானசேவை நேர மாற்றம்