நாகர்கோவில்: நாகர்கோவிலில் பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ. பிரமுகர் கைது செய்யப்பட்டார். குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள முட்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் நாஞ்சில் ஜெயக்குமார் (50). இவர் நாகர்கோவில் பார்வதிபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் மீது ஏற்கனவே வேலை வாங்கி தருவதாக பலரிடம் மோசடி செய்தது தொடர்பான வழக்குகள் உள்ளன. இவர் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
பின்னர் வெளியே வந்தார். இவர் மீதான வழக்குகள் விசாரணையில் இருந்து வருகின்றன. இவர் தற்போது பாரதிய ஜனதா கட்சி பிரமுகராக உள்ளார்.இந்த நிலையில் நாஞ்சில் ஜெயக்குமார் சமீபத்தில் நாகர்கோவிலில் உள்ள பல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். அங்கிருந்த பெண் டாக்டரிடம், தன்னை அரசியல் பிரமுகர் என அறிமுகப்படுத்தி பேசினார். சம்பவத்தன்று வழக்கம் போல் சிகிச்சைக்கு சென்ற போது, மிகவும் ஆபாசமான முறையில் நாஞ்சில் ஜெயக்குமார் அமர்ந்திருந்தாராம்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் டாக்டர், அவரை கண்டித்துள்ளார். அப்போது அவரை ஆபாசமாக பேசி மிரட்டி சென்ற நாஞ்சில் ஜெயக்குமார், பின்னர் போனில் பெண் டாக்டரை தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியதுடன், பெண் டாக்டரின் புகைப்படத்தை மார்பிங் செய்து தனது செல்போனில் வைத்திருப்பதாகவும், ஆசைக்கு இணங்க மறுத்தால் இணைய தளத்தில் வெளியிடுவேன் என்று கூறியும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் டாக்டர், கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, நாஞ்சில் ஜெயக்குமாரை கைது செய்தனர்.
The post பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ. பிரமுகர் கைது appeared first on Dinakaran.