×

விளையாட்டு போட்டியில் மயங்கி விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி தந்தை கண்முன்னே சோகம் விரிஞ்சிபுரம் அருகே பள்ளியில் பொங்கல் விழா

பள்ளிகொண்டா, ஜன.12: விரிஞ்சிபுரம் அருகே செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் நடந்த பொங்கல் விழா விளையாட்டு போட்டியின் போது, மயங்கி விழுந்த 2ம் வகுப்பு மாணவி தந்தை கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம் அடுத்த தார்வழி கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர், பெயின்டர். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 பெண் குழந்தைகள் உள்ளன. இதில், இளைய மகள் யோகேஸ்வரி(7), தார்வழி அருகேயுள்ள கல்லாங்குளம் அரசு நடுநிலைப்பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், பள்ளியில் நேற்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாணவர்களுக்கு சிறப்பு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. அதற்காக மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் பொங்கல் விழாவில் கலந்து கொள்ள பள்ளி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, யோகேஸ்வரி தனது தந்தை சுதாகர் மற்றும் அக்காவுடன் பள்ளிக்கு சென்றார். அதனை தொடர்ந்து, காலை 9.30 மணியளவில் பள்ளியில் பொங்கல் விழா தொடங்கி பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. அப்போது, யோகேஸ்வரி பிளாஸ்டிக் பந்து கொண்ட போட்டியில் பங்கேற்று விளையாடிய போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். மகள் விளையாடுவதை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்த தந்தை சுதாகர் அவர் மயங்கி விழுந்ததும் பதறியடித்துக் கொண்டு மகளை ஓடிச்சென்று தூக்கியுள்ளார். தொடர்ந்து, மயக்க நிலையில் இருந்த மாணவி யோகேஸ்வரியை தலைமையாசிரியர், ஆசிரியர்கள் உதவியுடன் மீட்டு அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனிடையே, மாணவி யோகேஸ்வரி கடந்த 5 வருடத்திற்கு முன்பு வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டு மருந்துகள் சாப்பிட்டு வந்தார் எனவும், கடந்த 1ம் தேதி முதல் மருந்து எடுத்து கொள்ளவில்லை எனவும் தந்தை சுதாகர் மருத்துவர்களிடம் கூறியுள்ளார். மேலும், இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காலையில் இன்முகத்தோடு தந்தையுடன் பள்ளிக்கு சென்ற மாணவி யோகேஸ்வரி மீண்டும் வீட்டிற்கு சடலமாக திரும்பி வந்ததை பார்த்து மாணவியின் தாயார் கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களின் கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

The post விளையாட்டு போட்டியில் மயங்கி விழுந்து 2ம் வகுப்பு மாணவி பலி தந்தை கண்முன்னே சோகம் விரிஞ்சிபுரம் அருகே பள்ளியில் பொங்கல் விழா appeared first on Dinakaran.

Tags : Pongal festival ,Virinchipuram ,Pallikonda ,Vellore district ,
× RELATED வேலூர் சைபர் கிரைம் போலீஸ்...