×

குமரி கல்லூரி மாணவர் ஷாரோன் கொலை வழக்கு: போலீசாரின் விசாரணை அறிக்கையை ரத்து செய்யக் கோரி கிரீஷ்மா மனு

திருவனந்தபுரம்: குமரி கல்லூரி மாணவர் ஷாரோனை கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கில் இறுதி விசாரணை அறிக்கை மற்றும் தொடர் நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி கிரீஷ்மா, அவரது தாய் மற்றும் மாமா ஆகியோர் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். கன்னியாகுமரி-கேரளா எல்லையில் உள்ள பாறசாலை பகுதியை சேர்ந்தவர் ஷாரோன். நெய்யூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அப்போது களியக்காவிளையை சேர்ந்த கிரீஷ்மா என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார்.

இந்தநிலையில் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாரோன் பின்னர் சிகிச்சை பலனின்றி இறந்தார். தங்களது மகனின் காதலி கிரீஷ்மா தான் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாக ஷாரோனின் பெற்றோர் பாறசாலை போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் ஷாரோனுக்கு கிரீஷ்மா கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்தது தெரியவந்தது. முதலில் பாறசாலை போலீசாரும், பின்னர் திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீசும் இந்த வழக்கில் விசாரணை நடத்தியது. குற்றப்பிரிவு போலீசார் கிரீஷ்மா மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது தாய் சிந்து, மாமா நிர்மல்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கிரீஷ்மா உட்பட 3 பேரும் தற்போது ஜாமீனில் உள்ளனர். இதற்கிடையே போலீசார் தாக்கல் செய்த இறுதி விசாரணை அறிக்கை மற்றும் தொடர் நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி கிரீஷ்மா தரப்பில் சமீபத்தில் நெய்யாற்றின்கரை நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து 3 பேரும் இதே கோரிக்கையை வலியுறுத்தி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளனர். இந்த மனு வரும் 22ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

The post குமரி கல்லூரி மாணவர் ஷாரோன் கொலை வழக்கு: போலீசாரின் விசாரணை அறிக்கையை ரத்து செய்யக் கோரி கிரீஷ்மா மனு appeared first on Dinakaran.

Tags : Kumari College ,Sharon ,Grishma ,Thiruvananthapuram ,Grieshma ,Kerala High Court ,
× RELATED ஷாரோன் கொலை வழக்கில் இறுதி விசாரணை...