×

வேலூர் மோட்டார் வாகன பெண் ஆய்வாளரிடம் ₹6.25 லட்சம் பறிமுதல் ராணிப்பேட்டை வீட்டிலும் அதிரடி சோதனை விஜிலென்ஸ் போலீசார் பின்தொடர்ந்து சென்று மடக்கினர்

வேலூர், ஜன.11: வேலூர் மோட்டார் வாகன பெண் ஆய்வாளரின் காரில் கணக்கில் வராத ₹3 லட்சம் பணத்தை வேலூர் லஞ்ச ஒழிப்புப்பிரிவு போலீசார் கைப்பற்றியதுடன், ராணிப்பேட்டையில் உள்ள அவரது வீட்டிலும் தொடர்ந்து சோதனை நடத்தி அங்கும் கணக்கில் வராத ₹3.5 லட்சத்தை பறிமுதல் செய்தனர். வேலூர் அடுத்த காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை வட்டார போக்குவரத்து சோதனை சாவடியில் முறைகேடாக பணம் வசூலிக்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் வேலூர் லஞ்ச ஒழிப்புப்பிரிவு டிஎஸ்பி எஸ்.சங்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர் விஜய், துணை அலுவல் ஆய்வுக்குழு அலுவலர் சரவணன்முத்து மற்றும் போலீசார் என 11 பேர் கொண்ட குழுவினர் நேற்று அதிகாலை 5 மணி முதல் கிறிஸ்டியான்பேட்டை போக்குவரத்து சோதனை சாவடியை ரகசியமாக கண்காணித்து வந்தனர். தொடர்ந்து காலை 8 மணியளவில் அங்கு பணி முடிந்து அங்கு தயார் நிலையில் இருந்த காரில் ஆந்திர மாநிலம் பொம்மசமுத்திரம், சேர்க்காடு, திருவலம் வழியாக ராணிப்பேட்டை சிப்காட் பாரதி நகர் எக்ஸ்டென்ஷனில் உள்ள அவரது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் ஏ.வசந்தியை பின்தொடர்ந்து சென்றனர். அவரது வீட்டின் அருகில் சென்றதும் வசந்தியின் காரை மடக்கி சோதனையிட்டனர். அதில் வெள்ளை நிற கவரில் ₹3 லட்சம் பணம் இருந்தது.

இதுகுறித்த விசாரணையின்போது அது கணக்கில் வராத முறைகேடாக பெற்ற பணம் என்பது தெரிய வந்தது. இதையடுத்து ₹3 லட்சம் பணத்தை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீசார், தொடர்ந்து மோட்டார் வாகன ஆய்வாளர் வசந்தியின் ராணிப்பேட்டை வீட்டில் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் வீட்டின் பூஜை அறையில் பல கவர்களில் இருந்தும் கணக்கில் வராத பணம் மொத்தம் ₹3 லட்சத்து 25 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. மொத்தம் அவரிடம் இருந்து ₹6.25 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. மேலும் வீட்டில் இருந்த ஆவணங்கள், நகைகள், நிலம் சம்பந்தமான ஆவணங்கள் இருந்தன. இதுதொடர்பாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சுமார் 7 மணி நேரம் விசாரணை மேற்கொண்டு விவரங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் காட்பாடி மற்றும் ராணிப்பேட்டையில் பெரும் பரபரப்ைப ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வேலூர் மோட்டார் வாகன பெண் ஆய்வாளரிடம் ₹6.25 லட்சம் பறிமுதல் ராணிப்பேட்டை வீட்டிலும் அதிரடி சோதனை விஜிலென்ஸ் போலீசார் பின்தொடர்ந்து சென்று மடக்கினர் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Ranipet ,Vellore Anti-Bribery Squad ,Ranipettai ,Dinakaran ,
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...