×

ஜன.27 முதல் பிப்.6 வரை சிவகங்கையில் புத்தக திருவிழா

சிவகங்கை, ஜன.10: சிவகங்கையில் புத்தக திருவிழா 2024 கடந்த இரண்டு ஆண்டுகளைப் போல் இந்த ஆண்டும் பிரமாண்டமாக ஜன.27முதல் பிப்.6வரை நடைபெற உள்ளது. இலக்கிய திருவிழா நடக்க உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2022 மற்றும் 2023ம் ஆகிய இரண்டு ஆண்டுகளாக புத்தகத் திருவிழா சிறப்பான முறையிலும், பொதுமக்களுக்கு பயனுள்ள வகையிலும் நடைபெற்றது. இந்த ஆண்டும், சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வரும் 27.1.2024 முதல் 6.2.2024 வரை 11நாட்கள் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட உள்ளன. இப்புத்தகத் திருவிழா தினந்தோறும் காலை முதல் இரவு வரை நடைபெறும்.

இதில் கூட்டாக புத்தகம் வாசித்தல், இலக்கியம் சார்ந்த பல்வேறு போட்டிகள், தலை சிறந்த பேச்சாளர்கள் கலந்து கொள்ளும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், பட்டி மன்றங்கள், கல்லூரி, பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய உணவுப்பொருட்கள் கண்காட்சி, குழந்தைகளுக்கான திரைப்பட அரங்கு, அறிவியல் கண்காட்சி ஆகியன நடைபெறும். இதில் 100க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படும். அரங்குகள் புத்தக விற்பனைக்கும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் அமைக்கப்படுகிறது.

புத்தகத் திருவிழாவில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் எழுத்தாளர்கள் எழுதி வெளியிட தயார்நிலையில் உள்ள புத்தகங்களை, இலக்கியம் சார்ந்த கூட்டங்களின் போது வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, எழுத்தாளர்கள் முன்கூட்டியே தங்களது புத்தக பிரதியை, மாவட்ட நிர்வாகத்தின் வளர்ச்சி பிரிவில் வழங்க வேண்டும்.

சிவகங்கை மாவட்ட அடையாளமாக திகழும் கோட்டைகள், அரண்மனை மாதிரிகள், உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் புத்தக திருவிழா 2024 நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள், மாணவ,மாணவிகள், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் தங்களது அறிவுச்சார்ந்த தேடலுக்கான களமாகவும், பரிசாக புத்தகங்களையே வழங்கிடும் முறையினை ஏற்படுத்திக் கொள்ளும் விதமாகவும், சிவகங்கை மாவட்ட மக்கள் அனைவரும் நல்லமுறையில் புத்தக திருவிழாவை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் ஆஷாஅஜித் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post ஜன.27 முதல் பிப்.6 வரை சிவகங்கையில் புத்தக திருவிழா appeared first on Dinakaran.

Tags : Book festival ,Sivagangai ,Sivagangai Book Festival 2024 ,Book ,
× RELATED தொழில் நுட்பங்களை பின்பற்றினால் எள்ளில் அதிக மகசூல் பெறலாம்