×

நீலகிரியில் ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி ’ திட்டத்தில் 414 அரசு பள்ளிகளில் தூய்மை பணி

*உபதலை அரசு பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு

குன்னூர் : நீலகிரி மாவட்டத்தில் உள்ள 414 அரசு பள்ளிகளில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டத்தின் கீழ் தூய்மை பணிகள் மற்றும் சுற்றுசூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் துவக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் தன் சுத்தம், பள்ளி வளாக தூய்மை, பள்ளியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பெறுதல், கழிவு மேலாண்மை முறைகளை அறிந்து கொள்ளுதல் மற்றும் மறுசுழற்சி முறைகளின் முக்கியத்துவத்தினை உணர்தல், நெகிழி பயன்பாட்டை குறைத்து இயற்கைக்கு உகந்த மாற்று பொருட்களை பயன்படுத்துவது குறித்த ஊக்க மூட்டும் நடவடிக்கைகள், பள்ளியில் காய்கறி தோட்டம் அமைத்தல் ஆகியன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஊட்டி வட்டாரத்தில் 138 பள்ளிகளிலும், குன்னூர் வட்டாரத்தில் 61 பள்ளிகளிலும், கோத்தகிரி வட்டாரத்தில் 65 பள்ளிகளிலும், கூடலூர் வட்டாரத்தில் 150 பள்ளிகளிலும் என மொத்தம் 414 பள்ளிகளில் சிறப்பு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உபதலை அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்ட ஆய்வு நடைபெற்றது. நீலகிரி மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) நந்தகுமார் இத்திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின், படி பள்ளியை சுற்றியுள்ள புதர்கள், குப்பைகள் அனைத்தும் உபதலை ஊராட்சி தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் நாட்டு நலப்பணி திட்டம், தேசிய பசுமைப்படை திட்ட மாணவர்கள் மூலம் தூய்மை செய்யப்பட்டது. பள்ளி வளாகம், வகுப்பறைகள், சமையலறை, கழிவறை என அனைத்து பகுதிகளும் தூய்மை செய்யப்படுவதை மாவட்ட கல்வி அலுவலர் உறுதி செய்தார். மேலும் பொதுப்பணித் துறை மூலம் புதுப்பிக்கப்பட்டு வண்ணம் அடிக்கப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்களை பார்வையிட்டார்.

இப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள இயற்கை காய்கறி தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை அறுவடை செய்யும் பணியை மாணவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார். இயற்கை காய்கறி தோட்டத்தை பராமரிக்கும் தேசிய பசுமைப்படை மாணவர்கள் மற்றும் பொறுப்பாசிரியர் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்வின் போது பள்ளி தலைமை ஆசிரியர் ஐயறின் ரெஜி மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இன்றும், நாளையும் தூய்மை முகாம்கள் நடைபெற உள்ளது.

18. சைனீஸ் வகை லெட்டியூஸ் பயிரிடுவதில் விவசாயிகள் ஆர்வம்

ஊட்டி : சைனீஸ் வகை லெட்டியூஸ் பயிரிடுவதில் நீலகிரி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் 60 சதவீதத்திற்கு மேற்பட்ட விவசாயிகள் தேயிலை விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு அடுத்தபடியாக பெரும்பாலான விவசாயிகள் மலைக்காய்கறி விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். இங்கு கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட், முட்டைகோஸ், முள்ளங்கி, பீன்ஸ், பூண்டு, பட்டாணி, காலிபிளவர் உட்பட பல்வேறு வகையான மலைக்காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில், சில விவசாயிகள் சைனீஸ் வகை காய்கறிகள் பயிரிடுவதிலும் தற்போது அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். சூப் மற்றும் துரித உணவுகளில் பயன்படுத்தப்படும் செலாரி, லெட்டியூஸ், சைனீஸ் கேபேஜ், சுக்கினி, புருக்கோலி மற்றும் லீக்ஸ் வகை காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் தற்போது இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. குறிப்பாக எப்பநாடு, சின்ன குன்னூர், தும்மனட்டி, மரகல், அணிக்கொரை, இடுஹட்டி, தாம்பட்டி, நுந்தளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தற்போது இதுபோன்ற சைனீஸ் வகை காய்கறிகள் மற்றும் கீரைகள் அதிக அளவு பயிரிடப்படுகிறது.

மலைக்காய்கறிகளை காட்டிலும் இவைகளுக்கு எப்போதும் ஒரு சீரான விலை கிடைப்பதால் தற்போது விவசாயிகள் சைனீஸ் வகை காய்கறிகள் மற்றும் கீரைகள் பயிரிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, சூப்புகளில் அதிகம் பயன்படுத்தப்படும் லெட்டியூஸ் பயிரிடுவதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு கிலோ ஒன்றிற்கு ரூ.50 வரை விலை கிடைக்கிறது. மூன்று மாதத்திற்கு ஒருமுறை அறுவடை செய்யப்படும் இந்த காய்கறிகள் மற்றும் கீரைகள் தற்போது ஊட்டியில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது.

The post நீலகிரியில் ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி ’ திட்டத்தில் 414 அரசு பள்ளிகளில் தூய்மை பணி appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,District Education Officer ,Upadalai Government School ,Coonoor ,Nilgiri ,Dinakaran ,
× RELATED மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்