×

சிறுத்தை தாக்கி உயிரிழந்த குழந்தை உடல் விமானம் மூலம் ஜார்க்கண்ட் அனுப்பி வைப்பு

ஊட்டி: பந்தலூரில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த குழந்தை உடல் விமானம் மூலம் சொந்த ஊரான ஜார்க்கண்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், பந்தலூரில் அருகே உள்ள மேங்கேரேஞ்சில் தனியார் தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்த வந்த ஜார்க்கண்ட் தம்பதியின் 3 வயது குழந்தை நான்சி கடந்த 6ம் தேதி சிறுத்தை தாக்கி உயிரிழந்தது. குழந்தையின் உடலை சொந்த மாநிலமான ஜார்கண்ட் மாநிலத்திற்கு கொண்டு செல்வதாக மாவட்ட நிர்வாகத்திடம் அவரது உறவினர்கள் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, சிறுமியின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.

சாலை மார்க்கமாக அனுப்பினால் ஜார்க்கண்ட் மாநிலம் சென்றடைய 3 நாட்களுக்கு மேல் ஆகும். இதனை கருத்தில் கொண்டு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஏற்பாட்டில் விமான பயணசீட்டு பெற்று விமானத்தின் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. நெடுந்தூர பயணம் மற்றும் விமானம் மூலம் கொண்டு செல்லப்படுவதால் சிறுமியின் உடல் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எம்பார்மிங் (சடல சீரமைப்பு) செய்யப்பட்டது. அப்போது நீலகிரி கலெக்டர் அருணா குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்து, ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு குழந்தையின் உடலை கொண்டுச் செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து கோவையிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பப்பட்டது. பின்னர், அங்கிருந்து ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. குழந்தையின் உடலை எடுத்து செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தந்த தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் குழந்தையின் பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர். இந்தநிலையில் குழந்தை இறந்த பகுதியில் தாயுடன் சென்ற சிறுவனை நேற்று முன்தினம் சிறுத்தை தாக்க முயன்றது. தாயும், தந்தையும் சிறுத்தையை விரட்டி சிறுவனை காப்பாற்றினர். மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

* சிறுத்தை வண்டலூருக்கு மாற்றம்
குழந்தையை கொன்ற சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி நேற்று முன்தினம் பிடிக்கப்பட்டது. பின்னர் சிறுத்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, ரேஞ்சர்கள் அய்யனார், ரவி மற்றும் கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் ஆகியோர் சிறுத்தையை கூண்டில் அடைத்து வாகனம் மூலம் சென்னை வண்டலூர் சரணாலயத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்குள்ள வனவிலங்குகள் மறுவாழ்வு மையத்தில் நேற்று சிறுத்தை விடுவிக்கப்பட்டது.

The post சிறுத்தை தாக்கி உயிரிழந்த குழந்தை உடல் விமானம் மூலம் ஜார்க்கண்ட் அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Jharkhand ,Pandalur ,Mangerange ,Bandalur, Nilgiris district ,Dinakaran ,
× RELATED ஈமக்கிரியை நிகழ்ச்சி: ஜார்க்கண்ட்...