×

புதுவையில் தொழிலாக செய்த 3 பேர் கைது பகலில் பேக்கரியில் வேலை.. இரவில் பைக் திருட்டு

*17 வாகனங்கள் பறிமுதல்

புதுச்சேரி : புதுவையில் பகலில் பேக்கரியில் வேலை செய்து கொண்டு இரவில் பைக் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை கோரிமேடு போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 17 வாகனங்களை பறிமுதல் செய்தனர். புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக பைக் திருட்டு அதிகமாக நடைபெற்று வந்தது. இதுதொடர்பாக காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்தன. இதையடுத்து, புதுவை முழுவதும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி பைக் திருடர்களை பிடிக்குமாறு போலீசாருக்கு சீனியர் எஸ்பி நாரா சைதன்யா உத்தரவிட்டார்.

அதன்பேரில், போலீசார் பைக் திருட்டு நடைபெற்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமிராக்கள் மூலம் பைக் திருடர்களை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கினர். இந்நிலையில் நேற்று முன்தினம் கோரிமேடு இன்பெக்டர் பாலமுருகன் சப்-இன்பெக்டர் ரமேஷ் ஆகியோர் தலைமையிலான போலீசார் சாரம் அவ்வை திடல் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக சந்தேகத்துக்குரிய வகையில் பைக்கில் வந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்த போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து, மூன்று பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கிருஷ்ணகிரியை சேர்ந்த வேலன் (32), சிவக்குமார் (20), மணிகண்டன் (30) என்பதும், இவர்கள் ஓட்டி வந்தது திருட்டு பைக் என்பதும் தெரியவந்தது.

மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக இவர்கள் புதுவை லெனின் வீதியில் தங்கி பேக்கரியில் வேலை செய்து வந்துள்ளனர். இதில் வேலன் மீது திருப்பூர் காவல் நிலையத்தில் இருசக்கர வாகனம் திருடிய வழக்கு உள்ளது. மூன்று ஆண்டுகளாக பேக்கரியில் வேலை செய்து வந்த இவர்கள், பைக் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர். பகல் நேரங்களில் பேக்கரியில் வேலை செய்தும், இரவு நேரங்களில் 3 பேரும் சேர்ந்து வீட்டு வாசல்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை திருடியுள்ளனர்.

லாஸ்பேட்டை, கோரிமேடு, பெரியகடை, காலாப்பட்டு, உருளையன்பேட்டை, முதலியார்பேட்டை, கிருமாம்பாக்கம் உள்பட பல இடங்களில் இவர்கள் திருடிய பைக்குகளை புதுவை பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் அவர்கள் வசிக்கும் வீட்டின் அருகே உள்ள இடங்களில் பதுக்கி வைத்து விற்க திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் அவர்கள் பதுக்கி வைத்திருந்த 17 இருசக்கர வாகனங்களை அதிரடியாக பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். பின்னர், மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

The post புதுவையில் தொழிலாக செய்த 3 பேர் கைது பகலில் பேக்கரியில் வேலை.. இரவில் பைக் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Puduvai ,Puducherry ,Korimedu police ,Dinakaran ,
× RELATED வெயில் படுத்தும் பாடு… ஏடிஎம் ஏசி அறையில் தூங்கிய போதை ஆசாமி