×

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு மினி மாரத்தான்: கலெக்டர் த.பிரபுசங்கர் தகவல்

 

திருவள்ளூர், ஜன. 8: கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியை முன்னிட்டு நாளை மறுநாள் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடக்கவிருப்பதாக கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டின் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் வரும் 19ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதற்கு திருவள்ளூர் மாவட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வரும் 10ம் தேதி (நாளை மறுநாள்) காலை 5.30 மணியளவில் 5 கிலோ மீட்டர் தூரத்திலான மினி மாரத்தான் போட்டிகள் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே நடைபெற உள்ளது. இந்த போட்டியானது திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இருந்து தொடங்கி 2.5 கி.மீ தூரத்திற்குச் சென்று காமராஜர் சிலை அருகே திரும்பி மீண்டும் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வந்து முடியும்.

இந்த மினி மாரத்தான் போட்டியில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறும் 3 மாணவர்கள் மற்றும் 3 மாணவியர்களுக்கு தனித்தனியே பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியானது 17ம் தேதி காலை 10 மணியளவில் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கலையரங்கத்தில் நடத்தப்பட்டு, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சரால் பரிசு வழங்கப்பட உள்ளது.

இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ மாணவியர்கள் அனைவரும் நாளை மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு வருகை தந்து, தங்களுடைய பெயர்களை பதிவு செய்திட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை 7401703482 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

The post கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டியை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு மினி மாரத்தான்: கலெக்டர் த.பிரபுசங்கர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Galo India Youth Sports Competition ,Collector ,T. Prabhu Shankar ,Tiruvallur ,Galo India Youth Sports Competitions ,Gallo India Youth Sports Competition ,T.Prabhushankar ,Dinakaran ,
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...