திருவண்ணாமலை, ஜன.8: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், வார விடுமுறை தினமான நேற்று பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். மேலும் ஜப்பான் நாட்டு பக்தர்கள் தியானத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வார இறுதி நாட்களிலும், தொடர் விடுமுறைகளிலும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்காக வருகின்றனர். இந்நிலையில், சனி, ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு, அண்ணாமலையார் கோயிலில் கடந்த இரண்டு நாட்களும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
அதன்படி, நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர், அதிகாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை நடை அடைப்பு இல்லாமல் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதிகாலையில் இருந்தே பொது தரிசன வரிசை மற்றும் ₹50 கட்டண தரிசன வரிசையில் கூட்டம் அலைமோதியது. சுமார் 2 மணி நேரம் முதல் இரண்டரை மணி நேரம் வரை தரிசன வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது,
மேலும், வெளிநாட்டு பக்தர்களும் நேற்று அதிக அளவில் கோயிலில் தரிசனம் செய்தனர். மேலும் சுவாமி தரிசனம் செய்த ஜப்பான் நாட்டு பக்தர்கள் கோயில் 4ம் பிரகாரத்தில் உள்ள கலையரங்கத்தில் அமர்ந்து சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டதை பலரும் வியந்து பார்த்தனர். கடந்த வாரங்களில், அதிகபட்சம் 5 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்த நிலை இருந்தது. ஆனால், தற்போது அமர்வு தரிசனம், சிறப்பு முன்னுரிமை தரிசனம் ஆகியவை நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால், பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசையில் காத்திருக்கும் நேரம் வெகுவாக குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு, நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தின் கீழ், நேற்று லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. அதனை, பக்தர்கள் ஆர்வமுடன் பெற்றுச்சென்றனர். மேலும், உத்ராயண புண்ணியகால உற்சவத்தின் 2ம் நாளான நேற்று காலை மற்றும் இரவில் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. அப்போது, அலங்கார ரூபத்தில் எழுந்தருளி உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
The post அண்ணாமலையார் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் appeared first on Dinakaran.