×

மதுரையில் நாளை எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு: மாநில தலைவர் தகவல்

 

மதுரை, ஜன. 6: மதுரையில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் நிருபர்களிடம் கூறியதாவது, ‘நமது இந்திய திருநாட்டின் உன்னதமான மதச்சார்பின்மை மீதான தாக்குதல்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. பல்வேறு வழிகளில் மதச்சார்பின்மைக்கு எதிராக ஆபத்துக்கள் அதிகரித்துள்ளன. ஆகவே, நாட்டின் அரசமைப்பு சட்டத்தின் மாண்பை காக்கவும், நாட்டின் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையின் லட்சியங்களை நிலைநிறுத்தவும் வெல்லட்டும் மதச்சார்பின்மை!

என்ற முழக்கத்தோடு நாளை ஜன.7ம் தேதி அன்று மதுரை மாநகரில் மாபெரும் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாட்டை எஸ்டிபிஐ கட்சி நடத்துகின்றது. நாட்டின் அரசியலமைப்பு சட்டம் உறுதி செய்துள்ள மதச்சார்பின்மையை காக்கும் நோக்கில் நடத்தப்படும் இம்மாநாட்டில் அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் கலந்து கொண்டு மாநாட்டை வெற்றி பெற செய்திட வேண்டும்.

இந்த மாநாட்டில் எஸ்டிபிஐ கட்சியின் அகில இந்திய தலைவர் எம்.கே.பைஸி, தமிழக எதிர்கட்சி தலைவர் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்’ என்றார். உடன் கட்சியின் மாநில துணை தலைவர் அப்துல் ஹமீது, மாநில பொது செயலாளர்கள்
அகமது நவவி, அச.உமர் பாரூக், நிஜாம் முகைதீன், நஸூருதீன், மாநில பொருளாளர் அமீர் ஹம்ஸா, மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக் மற்றும் மதுரை வடக்கு- தெற்கு மாவட்ட நிர்வாகிகள் இருந்தனர்.

The post மதுரையில் நாளை எஸ்டிபிஐ கட்சி சார்பில் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு: மாநில தலைவர் தகவல் appeared first on Dinakaran.

Tags : SDBI PARTY ,MADURA ,Madurai ,Nella Mubarak ,Secularism Defense Conference ,Dinakaran ,
× RELATED வாலிபர் கொலையில் ஒருவர் கைது