×

மதுரை மருத்துவக்கல்லூரியை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையமாக பயன்படுத்த தடை விதிக்க கோரி வழக்கு: தேர்தல் ஆணையம், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

மதுரை: மதுரை மருத்துவக்கல்லூரியை வாக்கு எண்ணிக்கை மையமாக பயன்படுத்த தடை விதிக்கக் கோரிய வழக்கில், இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரை மருத்துவக்கல்லூரி மாணவர் சங்கம் சார்பாக ராஜா முகமது, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல மனு: மதுரை மருத்துவக்கல்லூரி மிகவும் பிரபலமானது. இங்கு சுமார் 4,000க்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறும்போது மதுரை மருத்துவக்கல்லூரி முழுவதுமாக காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படுவதோடு, 3 மாதங்களுக்கு முன்பாகவே மதுரை மருத்துவக்கல்லூரி தேர்தல் ஆணையத்தால் பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. பதிவான வாக்குகள் மருத்துவக்கல்லூரியில் எண்ணப்படுகின்றன.

இதன் காரணமாக மருத்துவக்கல்லூரி மாணவர்கள் பல்வேறு வகையான மருத்துவ ஆய்வகங்கள் மற்றும் வகுப்பறைகளுக்கு செல்வதில் பெரும் சிக்கல்கள் ஏற்படுவதோடு, போலீசார், மாணவர்களை அனுமதிக்க மறுக்கின்றனர். இதனால் இருதரப்புக்கும் பிரச்னை ஏற்பட்டு, படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் மதுரை மருத்துவக்கல்லூரியை தேர்தல் பணிகள் எதற்கும் பயன்படுத்தக்கூடாது. தேர்தல் பணிகளை வேறு மையத்திற்கு இடம் மாற்றம் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘மதுரை மருத்துவக்கல்லூரியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வாக்கு எண்ணிக்கை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், மதுரை மருத்துவக்கல்லூரியை தவிர்த்து வேறு கலை அறிவியல் கல்லூரிகளையோ அல்லது இடத்தையோ தேர்வு செய்யலாமா? என கேள்வி எழுப்பினர். பின்னர், இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜன.22ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

The post மதுரை மருத்துவக்கல்லூரியை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையமாக பயன்படுத்த தடை விதிக்க கோரி வழக்கு: தேர்தல் ஆணையம், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madurai Medical College ,Election Commission ,Tamil Nadu government ,Madurai ,Election Commission of India ,Government of Tamil Nadu ,ECI ,Madurai Medical College Students' Union ,Election Commission, Tamil Nadu Government ,Dinakaran ,
× RELATED மக்களவைத் தேர்தல் பரப்புரை தொடர்பாக...