×

கீழ்பவானி பாசனத்தில் நடப்பு பருவத்தில் அரசு கொள்முதல் நிலையங்கள் மூலம் 50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

*அமைச்சர் சு.முத்துசாமி நம்பிக்கை

பவானி : கீழ்பவானி பாசனத்தில் நடப்பு பருவத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என அமைச்சர் சு.முத்துசாமி நம்பிக்கை தெரிவித்தார்.கீழ்பவானி வாய்க்கால் சாகுபடி பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் தொடங்கியுள்ள நிலையில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் ஈரோடு மண்டலம் சார்பில் நசியனூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் நேற்று திறக்கப்பட்டது.

நசியனூர் பூங்கா அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு,கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி, நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, அவர் கூறுகையில்: தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டப் பணிகள் சிறப்புடன் நிறைவேற்றப்பட்டு வருகிறது.விவசாயிகளின் நலன் கருதி, விவசாயிகள் விளைவித்த நெல்லை நேரடியாக அரசே கொள்முதல் செய்யும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், ஈரோடு மண்டலம் மூலம் நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது கீழ்பவானி பாசன பகுதிகளில் முதற்கட்டமாக நசியனூர், நாதிபாளையம், கூகலூர்,புதுவள்ளியம்பாளையம்,அளுக்குளி,கலிங்கியம் ஆகிய 6 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகிறது.தற்போது நசியனூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டுள்ளது.நெல் அறுவடையின் அடிப்படையில் விவசாயிகளின் நலனுக்காக மாவட்டத்தில் கூடுதல் இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்.

விவசாயிகள் விளைவிக்கும் நெல்லானது, குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் ஊக்கத்தொகையுடன் கூடுதலாக கிலோவிற்கு நெல் கிரேடு ‘ஏ” ரூ.23.10-ம், நெல் பொது ரகம் ரூ.22.65-ம் என்ற அடிப்படையில், இ-புரெக்யூர்மெண்ட் (e-Procurement) முறையில் விவசாயிகள் கைரேகை பதிவு செய்து, நெல் கொள்முதல் செய்யப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்டதற்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக ஈசிஎஸ் அடிப்படையில் செலுத்தப்படுகிறது. விவசாயிகள் நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனை செய்ய கிராம நிர்வாக அலுவலர் சான்று நெல் விளைந்த நிலத்தின் பட்டா, சிட்டா,அடங்கல்,விவசாயின் ஆதார் அட்டை நகல்,வங்கி கணக்கு புத்தக நகல்,பாஸ்போர்ட் சைஸ் போட்டோ – 2 ஆகிய ஆவணங்களுடன் நேரில் கைரேகை பதிவு செய்து பயன் பெறலாம்.

கடந்த பருவத்தில் ஈரோடு மாவட்டத்தில் 74 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 96865.520 மெ. டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.இதன்மூலம், 11,709 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். நசியனூரில் 2 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு அவற்றின் மூலம் 1533.360 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டதன் மூலம் 230 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். நடப்பு பருவத்தில் தடப்பள்ளி – அரக்கன்கோட்டை பாசனத்தில் 35 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 24613.680 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டதில், 3,417 விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்.

நடப்பு பருவத்தில் கீழ்பவானி பாசனத்தில் நெல் கொள்முதல் நிலையம் மூலம் தோராயமாக 50,000 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார்.மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் நவமணி கந்தசாமி, ஈரோடு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பிரகாஷ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் பானுமதி, துணை மேலாளர் ரமேஷ் பாபு, இணை இயக்குநர் (வேளாண்மை) முருகேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்தாமணி, நசியனூர் பேரூராட்சி தலைவர் மோகனப்பிரியா லோகேஸ்வரன், ஈரோடு வட்டாட்சியர் ஜெயக்குமார், ஈரோடு ஒன்றிய திமுக செயலாளர் தோப்பு டி.சதாசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, நசியனூரில் ரூ.22 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட நில வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடம் திறக்கப்பட்டது.

The post கீழ்பவானி பாசனத்தில் நடப்பு பருவத்தில் அரசு கொள்முதல் நிலையங்கள் மூலம் 50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் appeared first on Dinakaran.

Tags : Kilbhavani ,Minister ,Su.Muthusamy Hope Bhavani ,Su.Muthusamy ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...