×

போலி விதை நெல்லால் 8 ஏக்கர் நெற்பயிர் நாசம்

*விவசாயி வேதனை

சமயபுரம் : சமயபுரம் வாளாடி அருகே உள்ள ஒத்தை வீடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் நெல் சாகுபடி செய்வதற்காக சமயபுரம் பகுதியில் உள்ள ஒரு கடையில் விதை நெல் வாங்கச் சென்றார். அப்போது கடைக்காரர் நியூ அம்மன் என்ற விதை நெல் தன்னிடம் உள்ளதாகவும். நடவு செய்த 120 நாளில் அறுவடைக்கு வரும் என்றும், ஏக்கருக்கு 40 முதல் 50 மூட்டை வரை மகசூல் கிடைக்கும் என கூறினார். இதையடுத்து 180 கிலோ விதை நெல்லை ரூ.17,100க்கு வாங்கி தனது 8 ஏக்கர் வயலில் விதைத்துள்ளார்.

நாற்று நன்றாக வளர்ந்ததும் சரியாக 25 நாட்கள் கழித்து பறித்து நடவு செய்துள்ளார். நெற்பயிர் நடவு செய்த 30 நாட்களிலேயே கதிர் விடத் தொடங்கியுள்ளது. இந்த நெல் ரகம் மூன்று மாத பயிர் என்பதால் 60 நாட்களுக்குப் பிறகு பயிரில் கதிர் வந்தால் மட்டுமே நல்ல மகசூல் கிடைக்கும் ஆனால் 30 நாட்களில் கதிர் வைத்ததால் ராஜா விவசாயி அதிர்ச்சி அடைந்தார். நடவு செய்த பயிர்கள் தெளிவடைந்து, வேரூன்றி, களை பறிப்பதற்குள்ளாகவே தற்பொழுது கதிர் வந்தது. இந்த நெற்கதிர் பால் பிடித்து மகசூல் கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை இதற்கு உரம் வைத்து தண்ணீர் பாய்த்து எவ்வளவு செலவு செய்தாலும் இந்த பூட்டை பால் பிடித்து கதிர் ஆகாமல் அப்படியே காய்ந்து விடும் நிலையில் உள்ளது.

இதனால் நெல்மணிகள் கிடைக்காமல் வெறும் கால்நடைகளுக்கான வைக்கோல் மட்டுமே கிடைக்கும். இதையடுத்து விதைநெல் வாங்கிய கடைக்கு சென்று புகார் தெரிவித்துள்ளார். அப்போது அந்த கம்பெனி சேர்ந்தவர்கள் உரத்தை தெளித்தால் கதிர்கள் உதிர்ந்து விடும் பின்னர் மீண்டும் கதிர்கள் வந்து நெல் விளைச்சல் வரும் என கூறியுள்ளனர். இதனை அடுத்து 8,500 ரூபாய்க்கு உரத்தை வாங்கி ராஜா தெளித்துள்ளார். ஆனாலும் நெற்பயிர்கள் கதிர் பதர்கள் போன்றே இருந்ததால் மீண்டும் அந்த கடையை தொடர்பு கொண்டு கேட்டபோது நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. நாங்கள் திருச்சியில் இருந்து தான் விதைநெல் வாங்கி கொடுத்தோம் என்று தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வேளாண்மை துணை இயக்குனர், விதை ஆய்வாளரிடம் விவசாயி ராஜா புகார் அளித்துள்ளார் புகாரின் பேரில் 8 ஏக்கரில் நெல் நடவு செய்த விவசாய நிலத்தை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து சென்றுள்ளனர்.இது குறித்து விவசாயி ராஜா கூறியதாவது:இதுபோன்ற போலியான விதை நெல்லை விற்பனை செய்த கடை உரிமையாளர் மற்றும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை இரண்டு லட்சத்திற்கு மேல் செலவு செய்துள்ளதால் உரிய இழப்பீடு பெற்றுத் தர வேண்டும்.

மேலும் இனிவரும் காலங்களில் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து வகையான நெல் ரகங்களையும் வேளாண் துறையினர் விற்பனை செய்ய வேண்டும் என்றார்.மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் கலெக்டர் அலுவலகத்தில் திருச்சி மாவட்டத்தில் 250 ஏக்கருக்கு மேல் நெல் வாங்கி நடவு செய்த வயல்களில் இதேபோன்று நிலை இருப்பதாக கூறி விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்து போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

The post போலி விதை நெல்லால் 8 ஏக்கர் நெற்பயிர் நாசம் appeared first on Dinakaran.

Tags : Angham ,Samayapuram ,Ortha Veedu ,Valadi ,New Amman ,
× RELATED அம்மன் தரிசனம்: சமயபுரம் மாரியம்மன்