அரியலூர்,ஜன.5: மக்களவை தேர்தலில் வாக்குச் சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி அரியலூர் அண்ணா சிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் முறையில் மின்னணு இயந்திரத்தை தடை செய்ய வேண்டும். வாக்குச் சீட்டு முறையை அமுல்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ளப்பாதிப்பு தீவிர பேரிடராக அறிவிப்பு செய்து, தமிழக அரசு கோரிய வெள்ள நிவாரணம் ரூ.21 ஆயிரம் கோடியை ஒன்றிய அரசு உடனடியாக வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கதிர்வளவன் (கிழக்கு), அங்கனூர் சிவா(மேற்கு) ஆகியோர் தலைமை வகித்தனர். மண்டல துணை செயலர் மாறன், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மண்டல செயலர் அன்பானந்தம், முன்னாள் மாவட்ட செயலர் செல்வநம்பி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். மாநில அமைப்பு செயலர் வழக்குரைஞர் திருமார்பன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், தொகுதி செயலாளர்கள் அரியலூர் மருதவாணன், ஜெயங்கொண்டம் இலக்கியதாசன், செய்தித் தொடர்பாளர் சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
The post தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்த கோரி விசிக கட்சியினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.