பழநி, ஜன.5: நாசா விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்ட காலண்டரில், பழநி மாணவிகள் வரைந்த 3 ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா ஆண்டுதோறும் காலண்டர் வெளியிடுவது வழக்கம். அவ்வாறு வெளியிடப்படும் காலண்டரில் மாதத்திற்கு ஒரு ஓவியம் வீதம் 12 மாதங்களுக்கும் இடம்பெறும். இதற்கான தலைப்புகள் கொடுக்கப்பட்டு, உலகளவில் போட்டிகள் நடத்தப்பட்டு ஓவியங்கள் பெறப்படும்.
இதில் தேர்வாகும் ஓவியங்கள் மாதத்திற்கு ஒன்றாக பிரசுரிக்கப்படும். இந்நிலையில் 2024ம் ஆண்டின் காலண்டருக்கான போட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதில் 194 நாடுகளில் இருந்து 4 முதல் 12 வயதிற்குட்பட்ட சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பழநி அருகே புஷ்பத்தூரில் உள்ள தனியார் பள்ளி மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர்.
இதில் மாணவிகள் துகிலோவியா, லாயஷினி, தித்திகா ஆகியோர் சூரிய குடும்பம், ராக்கெட் மற்றும் விண்வெளி கிராப்ட் மற்றும் விண்வெளியில் வீரர் ஆகிய தலைப்புகளில் வரைந்த ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு, நாசாவின் 2024ம் ஆண்டு காலண்டரில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. தேர்வான ஓவியங்கள் வரைந்த மாணவிகளை பள்ளி தாளாளர் சுவாமிநாதன், செயலர் கார்த்திகேயன், பள்ளி முதல்வர் வசந்தா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
The post நாசா காலண்டரில் இடம்பெற்ற பழநி மாணவிகளின் ஓவியம் appeared first on Dinakaran.