×

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கனகராஜ் சகோதரரிடம் மான நஷ்டஈடு கோரிய வழக்கில் இபிஎஸ்சிடம் சாட்சியம் பதிவு: விரைவில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக தொடர்ந்த மான நஷ்டஈடு வழக்கில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் வழக்கறிஞர் ஆணையர் சாட்சியத்தை பதிவு செய்துள்ளார். கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் அந்த வழக்கு தொடர்பாக அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

இதையடுத்து, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதின்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டு, இந்த வழக்கில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்து உத்தரவிட்டது.

இந்நிலையில், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது எனவும், தனது வீட்டில் சாட்சியத்தை பதிவுசெய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்கவும் கோரி எட்ப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதை நீதிபதி ஏற்று வழக்கறிஞர் ஆணையராக வழக்கறிஞர் எஸ்.கார்த்திகை பாலனை நியமித்து உத்தரவிட்டார். அதன்படி சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் அவரிடம் வழக்கறிஞர் ஆணையர் எஸ்.கார்த்திகை பாலன் நேற்று சாட்சியத்தை பதிவுசெய்தார். இதுதொடர்பான அறிக்கையை அவர் விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார் எனத் தெரிகிறது.

The post கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கனகராஜ் சகோதரரிடம் மான நஷ்டஈடு கோரிய வழக்கில் இபிஎஸ்சிடம் சாட்சியம் பதிவு: விரைவில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் appeared first on Dinakaran.

Tags : EPSC ,Kodanad ,Kanagaraj ,CHENNAI ,Commissioner ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,Dhanapal ,Koda Nadu ,Kodanadu ,Court ,Dinakaran ,
× RELATED விசாரணை ஜூன் 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு:...