×

முரசொலி அலுவலக நிலம் பஞ்சமி நிலம் அல்ல ஆவணங்களை தாக்கல் செய்து தமிழக அரசு தரப்பில் வாதம்: தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை: முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த வழக்கில்தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான ”முரசொலி”யின் அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட், 1825 சதுர அடி நிலத்தில் அமைந்துள்ளது. இந்த நிலம் பஞ்சமி நிலம் என்று பாஜ மாநில நிர்வாகி சீனிவாசன் கடந்த 2019ம் ஆண்டு தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் மீதான விசாரணைக்கு அனுப்பிய நோட்டீசை எதிர்த்தும், இதை பட்டியலின ஆணையம் விசாரிக்க முடியாது எனவும் கூறி முரசொலி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரமன் லால் ஆஜராகி, ஜெர்மன் நிறுவனத்திடம் இருந்த இந்த நிலம் பார்வதி மாதவன் நாயருக்கு விற்கப்பட்டது. அவரிடமிருந்து அஞ்சுகம் பதிப்பகம் வாங்கியது. இந்த நிலம் ரயத்வாரி நிலம்தான். பஞ்சமி நிலம் அல்ல என்று கூறி ஆவணங்களை தாக்கல் செய்தார். முரசொலி அறக்கட்டளை தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, 2019ல் அளிக்கப்பட்ட புகார் மீது தேசிய பட்டியலின ஆணையத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் மனுதாரர் தரப்பில் ஆஜராகி வாதிடப்பட்டது. ஆனால் இதுவரை ஆணையம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இது அரசியல் ஆதாயம் தேடுவதற்கான செயலாகவே தெரிகிறது. அரசு நிதியில் செயல்படும் ஆணையத்தை தங்களுக்கு ஆதரவாக தவறாக பயன்படுத்தி தலைப்புச் செய்திகளில் இடம்பெறுவதற்கான நடைமுறைகளை மேற்கொண்டுள்ளனர். பட்டியலின மக்களின் உரிமைகளை காப்பதற்காக அரசியலமைப்பின்படி உருவாக்கப்பட்ட ஆணையம் தனது பணியை விட்டுவிட்டு இதுபோன்ற தேவையற்ற, பொய்யான குற்றசாட்டுகளை விசாரித்து வருகிறது.

உண்மையிலேயே பட்டியலின மக்கள் மீது அக்கறை இருந்தால் ஆணையம் மணிப்பூர் மக்கள் பாதிக்கப்பட்டபோது அங்கு சென்று பார்த்து விசாரித்திருக்க வேண்டும். ஆனால், ஆணையம் மணிப்பூர் விஷயத்தில் என்ன செய்தது. முரசொலி அறக்கட்டளை அஞ்சுகம் பதிப்பகத்திடமிருந்து குத்தகை அடிப்படையில் நிலத்தை பெற்றுள்ளது. அஞ்சுகம் அறக்கட்டளைதான் நிலத்தின் உரிமைதாரர். ஆனால், புகார் கொடுத்தவர் முரசொலி அறக்கட்டளை மீது புகார் கொடுத்துள்ளார். இதை ஆணையமும் கவனிக்கவில்லை. இதிலிருந்தே இந்த புகார் அரசியல் உள்நோக்கத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது என்று தெளிவாக தெரிகிறது.

ஆணையத்திற்கு சொத்து மீது எந்த முடிவையும் எடுக்க அதிகாரம் தரப்படவில்லை. சொத்து மீது முடிவெடுக்க ஆணையத்திற்கு தடை விதிக்க உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. ஆணையத்தில் விசாரணை நடந்தபோது கடந்த அதிமுக ஆட்சியில் தலைமை செயலாளர் தாக்கல் செய்த மனுவில் முரசொலி நிலம் பஞ்சமி நிலம் அல்ல என்று தெரிவிக்கப்பட்டது. அந்த அறிக்கைக்கு கூட ஆணையம் மரியாதை தரவில்லை. வருவாய்துறை ஆவணங்கள், பட்டா புத்தகம் அனைத்திலும் பஞ்சமி நிலம் என்று கூறப்படவில்லை.

இந்த நிலையில் தேவையற்ற புகாரை கொடுத்து மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கிறார்கள். புகார் கொடுத்தவர்கள் இதுவரை எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை. எனவே, ேதசிய பட்டியலின ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். இதையடுத்து, தேசிய பட்டியலின ஆணையம் தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், நிலத்தின் உரிமை யாருக்குள்ளது என்று ஆணையம் முடிவெடுக்காது. ஆனால் சம்பந்தப்பட்ட நிலம் பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்டதா என்பதை ஆய்வு செய்ய ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது. இதற்கு தடை விதிக்க முடியாது என்றார்.

புகார்தாரர் சீனிவாசன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ரவி, முரசொலி அறக்கட்டளை என்பது அந்த நிலத்தின் வாடகைதாரர் மட்டும்தான். அதனால், அஞ்சுகம் பதிப்பகத்திடம் கேளுங்கள் என்று ஆணையத்திடம் சொல்ல முடியுமே தவிர, ஆணையம் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர முடியாது. பட்டியலினத்தை சேர்ந்தவர் மட்டும்தான் புகார் அளிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனாலும் இதே விவகாரம் தொடர்பாக பட்டியல் இனத்தை சேர்ந்த பி.பெரியசாமி என்பவரும் புகார் அளித்துள்ளார். எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன. ஆணையம் விசாரணைக்கு கேட்டால் ஆவணங்களை தாக்கல் செய்ய தயார் என்றார். இதையடுத்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்தார்.

The post முரசொலி அலுவலக நிலம் பஞ்சமி நிலம் அல்ல ஆவணங்களை தாக்கல் செய்து தமிழக அரசு தரப்பில் வாதம்: தீர்ப்பு தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Tags : Murasoli ,panchami ,Tamil Nadu government ,CHENNAI ,High Court ,Murasoli Foundation ,DMK ,12 Ground, ,Kodambakkam, Chennai ,BJP ,Panchami land ,Tamilnadu government ,Dinakaran ,
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...