×

குறு, சிறு தொழில்கள் வளர்ச்சிக்காக தென்னை நார் பொருட்களின் மேம்பாட்டுக்கு புதிய தொழில் கொள்கை: முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை: “தென்னை நார் கொள்கை 2024”ஐ சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். தென்னை நார் கொள்கை, தென்னை நார் தொழில் நிறுவனங்களின் தேவைகளை நிறைவேற்றுவது, அந்நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உறுதி செய்வது மற்றும் தொழில் நிறுவன சங்கங்களின் கருத்துகளை கேட்டறிந்து, அதன்படி நடவடிக்கை மேற்கொண்டு இத்துறையின் வளர்ச்சியில் முதலீடு செய்த அனைத்து பங்குதாரர்களையும் பயன்பெறச் செய்வது ஆகியவற்றை உள்ளடக்கியது . இக்கூட்டு அணுகுமுறையானது, இத்தொழில்துறையின் தேவைகளை நிறைவேற்றுவது மற்றும் அதன் முன்னேற்ற இலக்கை அடைவதற்கான தீர்வுகளை வழங்குவதையும் உறுதி செய்கிறது.

தென்னை நார் தொழில் கொள்கையின் முக்கிய சிறப்பம்சங்கள் வருமாறு:
* உலக தரத்திலான மதிப்பு கூட்டப்பட்ட தென்னை நார் பொருட்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க, தென்னை நார் துகள் மற்றும் தென்னை நார் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கான அதிநவீன ஆய்வகம் நிறுவப்படும்.
* தென்னை நார் துகள் மற்றும் தென்னை நார் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்காக பிரத்யேகமான சிறப்பு மையங்களை உருவாக்குவது தென்னை நார் கொள்கையின் நோக்கமாகும். இந்த மையங்கள் புதிய மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளுக்கான ஆராய்ச்சி, விவசாயம் மற்றும் தோட்டக்கலையில் மண்ணில்லா வளர்ப்பு ஊடக பயன்பாடு, புத்தொழில்கள் மற்றும் புதிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் பயன்பாடு, தென்னை நார் சார்ந்த தொழில்களின் போட்டித்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தும்.
* உள்நாடு மற்றும் சர்வதேச அளவில் சந்தையை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் வகுக்கப்படும்.
* தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை வழங்கிட கிடங்குகளை நிறுவுதல் மற்றும் குழும மேம்பாடு ஆகியவை தென்னை நார் சார்ந்த தொழில்களின் வளர்ச்சிப் பாதையை மேம்படுத்தும்.
* ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் புதிய தென்னை நார் சார்ந்த பொருட்களின் உற்பத்தியை விரைவாக மேம்படுத்த கொள்கை வழிவகுக்கும்.
* தென்னை நார் சார்ந்த தொழில் துறையில் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கி முன்னேற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இந்த கொள்கை கிராமப்புற பொருளாதார முன்னேற்றம், மகளிர் வேலைவாய்ப்பு, தென்னை விவசாயிகளுக்கான வருமானத்தை அதிகரித்தல் புதுமை, போட்டித்திறன் மற்றும் பொறுப்புடன் கூடிய நிலையான வளர்ச்சி மூலம் புதிய சகாப்தத்தை அடைய வழிகோலுகிறது.
இந்த நிகழ்ச்சியின்போது, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் அர்ச்சனா பட்நாயக், தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் நிர்மல்ராஜ், தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவன முதன்மை செயல் அலுவலர் முனைவர் கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

The post குறு, சிறு தொழில்கள் வளர்ச்சிக்காக தென்னை நார் பொருட்களின் மேம்பாட்டுக்கு புதிய தொழில் கொள்கை: முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K. Stalin ,CHENNAI ,M.K.Stalin ,Chennai Chief Secretariat ,Dinakaran ,
× RELATED மோடியின் அப்பட்டமான சதித்திட்டத்தை...