×

247 தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட 20 அடி உயர திருவள்ளுவர் சிலையை நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட 20 அடி உயர திருவள்ளுவர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார். கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் சிங்காநல்லூர் குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட 9 குளங்கள் உள்ளன.ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், இந்தக் குளங்களின் கரைகளை மேம்படுத்தி, பொதுமக்கள் பொழுதுபோக்கும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் குறிச்சி பகுதியில் 2 பிரிவாக 340 ஏக்கர் பரப்பளவில் குறிச்சி குளம் அமைந்துள்ளது.இங்கு தமிழர் மரபை பிரதிபலிக்கும் வகையில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. குறிச்சி குளத்தின் கிழக்கு கரைப் பகுதியில் திறந்தவெளி அரங்கம் போல ‘செல்ஃபி பாயின்ட்’ ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, பரத நாட்டியம் ஆடும் பெண், ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரர்கள், சிலம்பம் ஆடும் வீரர்கள் என 4 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் குறைந்தபட்சம் 15 அடி உயரத்தில் அமைகின்றன.

இந்த குறிச்சி குளத்தில் தமிழ் எழுத்துக்களை கொண்டு சுமார் 2.5 டன் எடையில் 20 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மழையையும், வெயிலையும் தாங்கும் வகையில், துருப்பிடிக்காத வகையில் ஸ்டீலால் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர் மெய் எழுத்து, ஆயுத எழுத்து ஆகிய 247 தமிழ் எழுத்துக்களை கொண்டு செய்யப்பட்டுள்ளது.திருவள்ளுவருக்கு தமிழ் எழுத்துக்களால் சிலை வைப்பது நாட்டிலேயே இது தான் முதல் முறை. இதில் சில சொற்கள் மறைத்து பொருத்தப்பட்டுள்ளன. மக்கள் இச்சிலையை உற்று நோக்கும்போது, அந்த 4 சொற்களும் தெரியவரும். இந்த திருவள்ளுவர் சிலையை நாளைய தினத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

The post 247 தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட 20 அடி உயர திருவள்ளுவர் சிலையை நாளை திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Coimbatore Corporation ,Singanallur Pond ,Kurichi Pond ,City ,
× RELATED பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம்...