×

குமாரபாளையத்தில் மூதாட்டி கொலையில் பள்ளி மாணவி கைது: சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்ப்பு

குமாரபாளையம்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மேற்கு காலனியை சேர்ந்தவர் மகேஸ்வரி (56). புத்தர்தெரு அரசு பள்ளியில் செயல்படும் காலை உணவுத்திட்ட மையத்தில் பணியாளராக வேலை செய்து வந்தார். இவரை கடந்த நவம்பர் 20ம் தேதி முதல் காணவில்லை என அவரது மகள் கவிதா, குமாரபாளையம் போலீசில் புகாரளித்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டனர். காலை உணவுத்திட்டத்தில் பணியாற்றிய மகேஸ்வரி, ஏலச்சீட்டும் நடத்தி வந்தார். பலருக்கும் வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார். இவரிடம் காலை உணவுத்திட்டத்தில் பணிபுரியும் மற்றொரு பணியாளரான கௌரிகாஞ்சனா (36) வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார்.

மேலும் தனக்கு தெரிந்தவர்களுக்கும் கடன் வாங்கி கொடுத்து வசூலித்து வந்துள்ளார். இந்த பணத்தை கௌரிகாஞ்சனா திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நவம்பர் 20ம் தேதி காலை உணவு கூடத்தில், மகேஸ்வரி பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்ததால் ஆத்திரமடைந்த கௌரிகாஞ்சனா மாடிப்படியில் இருந்து மகேஸ்வரியை தள்ளி விட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்து மயங்கிய மகேஸ்வரியின் முகத்தை தனது சேலையால் இறுக்கி கொலை செய்துள்ளார்.

பின்னர் இரவு 9 மணிக்கு மேல் தனது 16 வயது மகளின் உதவியோடு, மொபட்டில் மகேஸ்வரியின் சடலத்தை எடுத்து சென்று பவானி காளிங்கராயன் கால்வாயில் வீசிவிட்டு சென்றார். பின்னர் மகேஸ்வரியின் கழுத்தில் அணிந்திருந்த தாலியை கழற்றி, அதை அடகு வைத்து ₹42 ஆயிரம் பெற்றுள்ளார். போலீசார் விசாரணையை அடுத்து, கௌரிகாஞ்சனா கடந்த 30ம் தேதி கிராம நிர்வாக அலுவலர் முருகனிடம் சரணடைந்தார். அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கில் கௌரிகாஞ்சனாவின் மகள், தனது தாயாருடன் சேர்ந்து, மகேஸ்வரியின் சடலத்தை எடுத்து சென்று கால்வாயில் வீச உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து, நேற்று போலீசார், அவரை கைது செய்து, நாமக்கல் சிறுவர் நீதிமன்ற குழுமத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை நீதிபதி விசாரித்து, சிறுமியை வரும் 10ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் சேலம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

The post குமாரபாளையத்தில் மூதாட்டி கொலையில் பள்ளி மாணவி கைது: சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Kumarapalayam ,Juvenile reform ,Maheshwari ,Kumarapalayam West Colony, Namakkal district ,Buddha Theru Government School ,Juvenile ,
× RELATED மது விற்ற 5 பேர் கைது