×

சண்டக்கோழி-2 படத்தின் ஜிஎஸ்டி தொகை விவகாரம் லைகா நிறுவனத்தின் சொத்துகளை முடக்கும்படி நடிகர் விஷால் வழக்கு: பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நடிகர் விஷால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தன்னுடைய “விஷால் பிலிம் பேக்டரி” பட நிறுவனத்தின் சண்டக்கோழி-2 திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு திரையரங்க மற்றும் சாட்டிலைட் உரிமைக்காக லைகா நிறுவனத்துடன் 2018ல் ரூ.23 கோடியே 21 லட்சத்திற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி படம் வெளியிடப்பட்டது. அதற்கான 12 சதவீத ஜிஎஸ்டி தொகையை லைகா பட நிறுவனம் செலுத்தாததால், அபராத தொகையுடன் சேர்த்து 4 கோடியே 88 லட்ச ரூபாயை நான் செலுத்தினேன்.

என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய லைகா நிறுவனம், பல இடங்களில் கடன் பெற்று 500 கோடி ரூபாய் செலவில் கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் “இந்தியன் 2” படத்தை தயாரித்து வருகிறது. இந்த படம் சரியாக ஓடவில்லை என்றால் கடுமையான நிதி நெருக்கடியை லைகா நிறுவனம் சந்திக்க நேரிடும். எனக்கு கிடைக்க வேண்டிய தொகை கிடைக்காமல் போய்விடும். லைகா நிறுவனம் ஒரு வெளிநாட்டு நிறுவனம் என்பதால் நிறுவனத்தை மூடிவிட்டு தயாரிப்பாளர் வெளிநாட்டிற்கு தப்பி செல்வதற்கும் வாய்ப்புள்ளது.

எனவே, நான் செலுத்திய ஜிஎஸ்டி தொகை மற்றும் அபராதத் தொகையை, வட்டியுடன் சேர்த்து 5 கோடியே 24 லட்சத்து 10 ஆயிரத்து 423 ரூபாய்க்கான உத்தரவாதத்தை லைகா நிறுவனம் தருமாறு அந்த நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும். இந்த வழக்கு முடியும் வரை ஆர்பிஎல் வங்கியில் லைகா நிறுவனம் வைத்துள்ள சொத்துகளை முடக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், வழக்கு தொடர்பாக லைகா நிறுவனம் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை வரும் 19ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post சண்டக்கோழி-2 படத்தின் ஜிஎஸ்டி தொகை விவகாரம் லைகா நிறுவனத்தின் சொத்துகளை முடக்கும்படி நடிகர் விஷால் வழக்கு: பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Vishal ,Lyca ,Chennai ,Vishal Film Factory ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…