×

தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்களால் பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்: 25 கி.மீ ஊர்ந்து சென்ற வாகனங்கள்

சென்னை: தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்களால் நேற்று காலை பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் தவித்தனர். பள்ளிகளின் அரையாண்டு தேர்வு முடிவு, கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு போன்றவற்றால் தொடர்ந்து விடுமுறை இருந்தது. இதனால் சென்னையில் உள்ள தென்மாவட்ட மக்கள், குடும்பத்துடன் விடுமுறையை கழிக்கவும், பண்டிகையை கொண்டாடவும் சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தேனி, திருநெல்வேலி, புதுக்கோட்டை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

பள்ளிகளின் 10 நாள் விடுமுறை, ஆங்கில புத்தாண்டு கொண்டாடங்களை முடித்துவிட்டு பொதுமக்கள் நேற்று முன்தினம் மாலை முதல் சென்னை நோக்கி படையெடுத்தனர். ஒரே நாளில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார், பைக், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்ததால், செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி முதல் சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரம் வரை கடுமையான வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் வாகன ஓட்டிகள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தனர். பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டதால், அவசர அவசரமாக குழந்தைகளை அழைத்துக்கொண்டு பெற்றோர் வந்தனர். போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டதால் குறித்த நேரத்தில் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவித்தனர். பரனூர் சுங்கச்சாவடியில் இருந்து பெருங்களத்தூர் வரை பல கிலோ மீட்டர் தூரத்துக்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. நேற்று காலை 11 மணி அளவில்தான் போக்குவரத்து நெரிசல் சீரானது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “பரனூர் சுங்கச்சாவடியில் இருந்து சிங்கப்பெருமாள் கோவில் வரை தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருவதாலும், சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் மேம்பால பணி நடந்து வருவதாலும், இப்பகுதி அருகே ஒரகடம் ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தொடர் விடுமுறை நாட்களில் சொந்த ஊர் சென்றுவிட்டு சென்னை திரும்பும் மக்களாலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றனர்.

The post தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்களால் பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்: 25 கி.மீ ஊர்ந்து சென்ற வாகனங்கள் appeared first on Dinakaran.

Tags : Paranur tollbooth ,Chennai ,Paranur ,road ,Christmas ,English ,New Year ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...