×

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொள்ளாச்சியில் மண்பானை தயாரிக்கும் பணி தீவிரம்

பொள்ளாச்சி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராம பகுதிகளில் பொங்கல் பானை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். போதியளவு களிமண் கிடைக்காததால் பானை விலை உயர்ந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான ஆர்.பொன்னாபுரம், முத்தூர், வடக்கிபாளையம், கோட்டூர், ஒடையக்குளம், தேவபட்டினம், சேத்துமடை, அம்பராம்பாளையம், சமத்தூர், அங்கலக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் மண்பாண்ட தொழில் அதிகளவில் நடக்கிறது. சமையலுக்கு தேவையான பானை மட்டுமின்றி, நவராத்திரி கொலு பொம்மை, விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை, கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அகல் விளக்குகள் தயாரிப்பது உள்ளிட்ட முக்கிய விசேஷ தினங்களை முன்னிட்டு மண்பாண்ட தொழில் பரபரப்பாக இருக்கும்.

இந்த நிலையில் இந்த ஆண்டு வருகிற 15ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண்பானை தயாரிப்பில் தொழிலாளர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். களிமண்ணால் செய்யப்படும் பானைக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், பலர் ஆர்டர் கொடுத்து வாங்கி செல்கின்றனர். சிறியது முதல் பெரிய அளவிலான பானை தயாராகி வருகிறது. இருப்பினும், இந்த முறை பானை தயாரிப்பதற்கு உண்டான களிமண் போதியளவு கிடைக்காததால் அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. அதிக விலை கொடுத்து களிமண் வாங்க வேண்டும். மேலும் விலை கட்டுபடியாகாது என்பதால், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மண்பாணை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது ஒரு மாதத்திற்கு முன்பாகவே பானை தயாரிப்பில் ஈடுபடுவோம். இந்த ஆண்டு பொங்கலுக்கு தேவையான பானை தயார் செய்து, மார்க்கெட்டில் விற்பனைக்கு அனுப்பிவைப்பதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். பொங்கல் நெருங்குவதை முன்னிட்டு பொள்ளாச்சி மட்டுமின்றி, உடுமலை, பழனி, பல்லடம், சுல்தான்பேட்டை, நெகமம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து ஆர்டர்கள் வந்துள்ளது. கடந்த அண்டை விட இந்த ஆண்டு பொங்கல் பானை ரூ.20 முதல் ரூ.30 வரை உயர்ந்துள்ளது. போதிய அளவு களிமண் கிடைக்காத்தால் அதிக விலைக்கு பானைகள் விற்பனை செய்ய வேண்டி உள்ளது. இவ்வாறு கூறினர்.

 

The post பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொள்ளாச்சியில் மண்பானை தயாரிக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Pongal ,Pongal festival ,Pollachchi ,Gowai ,
× RELATED பொள்ளாச்சி சுற்று வட்டார...