- மதுரை
- முதல் அமைச்சர்
- மோடி
- ஸ்டாலின்
- திருச்சி
- முனையம் 2
- திருச்சி விமான நிலையம்
- கவர்னர்
- ஆர்.என்.ரவி
- மு. கே. ஸ்டாலின்
- யூனியன் மாநிலத்தின் விமான நிலைய அமைச்சர்
- ஜோதிராதித்யா சிந்தியா
திருச்சி : ரூ.1,100 கோடி மதிப்பில் திருச்சி விமான நிலைய 2வது முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒன்றிய அரசின் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், அமைச்சர்கள் எ.வ.வேலு, டி.ஆர்.பி.ராஜா, அன்பில் மகேஷ் உள்ளிட்டோரும் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,”₹1,112 கோடி செலவில் அமைக்கப்பட்ட புதிய முனையத்தை திறந்து வைத்த பிரதமருக்கு நன்றி. தொட்ட துறை அனைத்திலும் சிகரம் தொட்ட தமிழ்நாடு. இந்தியா பொருளாதாரத்தில் தமிழ்நாடு முக்கிய பங்காற்றி வருகிறது. மதுரையை பன்னாட்டு விமான நிலையமாக மாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைக்கிறோம்.
சென்னை மெட்ரோ 2-ம் கட்ட திட்டத்துக்கான ஒன்றிய அரசின் நிதியை விரைந்து வழங்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில் உள்ள சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பெல் நிறுவனம் ஒப்பந்தப்பணிகளை வழங்க வலியுறுத்துகிறேன். புதிதாக தரம் உயர்த்தப்பட்ட 2 வழிச்சாலைக்கு சுங்கக்கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். சென்னை – பினாங்கு, சென்னை – டோக்கியோ இடையே நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும். பலத்த மழையால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சேதத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்.
புயல் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவித்து தேசிய பேரிடர் நிதி வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு வைக்கும் கோரிக்கைகளில் அரசியல் எதுவும் இல்லை. தமிழ்நாடு அரசின் கோரிக்கைளை பிரதமர் மோடி நிறைவேற்றித் தருவார் என்று நம்புகிறேன்,”இவ்வாறு தெரிவித்தார். இதனிடையே திருச்சி விமான நிலைய திறப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது பாஜகவினர் மோடி மோடி, ஜெய்ஸ்ரீராம் என கூச்சலிட்டனர்.தொடர்ந்து கூச்சலிட்ட பாஜகவினரை அக்கட்சி நிர்வாகிகள் அமைதிபடுத்தினர்.
The post மதுரையை பன்னாட்டு விமான நிலையமாக மாற்றுக.. பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கை என்னென்ன ? appeared first on Dinakaran.