×

தலைவர் கலைஞரின் வரலாற்றை கவிதையாக நீங்கள் தரவேண்டும் இது என் அன்பு கட்டளை: வைரமுத்துவின் கவிதை நூலை வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னை, காமராஜர் அரங்கில் வைரமுத்துவின் மகா கவிதை வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத் தலைவர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், நீதிபதிகள், அமைச்சர்கள், மதன் கார்க்கி, கபிலன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், வெற்றி தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கலைஞரின் பாராட்டு மழையில் நனைந்தவர் கவிப்பேரரசு. இந்த ‘கவிப்பேரரசு’ என்ற பட்டமே கலைஞர் வழங்கியதுதான். வைரமுத்து எழுதிய 15 நூல்களை வெளியிட்ட கைகள் கலைஞர் கைகள். இது அவர்கள் இருவருக்கும் இருந்த நட்புக்குப் பெருமை. இந்த நேரத்தில் உங்களிடம் ஓர் அன்பான ஒரு வேண்டுகோளை வைக்க நினைக்கிறேன். மகாகவி பாரதியின் வாழ்க்கை வரலாற்றை ‘கவிராஜன் கதை’ என்ற தலைப்பில் எழுதியதைப் போல, தலைவர் கலைஞரின் வரலாற்றை கவிதையாக நீங்கள் தர வேண்டும்.

இது எனது அன்பான வேண்டுகோள், உங்கள் தமிழில் கலைஞருக்கு ஒரு கவிதை வரலாறு வந்தாக வேண்டும் என்ற உங்கள் ரசிகனின் வேண்டுகோள், இன்னும் கூட கொஞ்சம் உரிமையோடு சொன்னால் கட்டளை. நிலம், நீர், தீ, காற்று, வானம் ஆகிய ஐம்பூதங்களைப் பற்றிய கவிதைத் தொகுப்பு என்பதை நீங்கள் அனைவரும் வாசிக்கும் போது உணர்வீர்கள். கனிமம், தாவரம், நீர், நுண்ணுயிர், விலங்கு, காற்று, வானம், தீ. அனைத்தும் நிகழ்கால மனிதா! உனக்கல்ல. நீ கால்நடையாய் வந்த ஒரு பயணி. நுகர்ந்தாயா, போய்விடு என்று வழிகாட்டுகிறார்.

இப்படி ஐம்பூதங்களும் கவிஞரின் தமிழில் அடங்கிக் கிடக்கின்றன இந்த நூலில். அறிவியலை அதுவும் நவீன அறிவியலைச் சொல்லும் திறம் கொண்டது தமிழ்மொழி என்பதை நிரூபிப்பதாகவும் இந்த புத்தகம் அமைந்துள்ளது. புயலும், மழையும், வெள்ளமும் தலைநகர் சென்னை முதல் தென் மாவட்ட குமரி வரைக்கும் சுற்றிச் சுழன்றடித்து முடித்திருக்கும் இந்த நேரத்தில் ஐம்பூதங்களைப் பற்றி கவிஞர் எழுதி இருக்கிறார். இது கவிதைப் புத்தகம் அல்ல, காலப் புத்தகம் என்றே சொல்லலாம். நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய ஆபத்தாக காலநிலை மாற்றம்தான் இருக்கப் போகிறது என்பதை பல்வேறு நிகழ்ச்சிகளில் சொல்லி இருக்கிறேன்.

காலநிலை மாற்றத்தை உலகம் எதிர்கொள்ள, அதன் தாக்கத்தை மட்டுப்படுத்த, 2050ம் ஆண்டுக்குள் கார்பன் சமநிலையை எட்டவேண்டும் என்று பல்வேறு பன்னாட்டு ஆய்வுகளும் உச்சி மாநாடுகளும் அறிவுறுத்துகின்றன. தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் மூலம் தமிழ்நாட்டின் காடுகளின் பரப்பளவை 21 விழுக்காட்டில் இருந்து 33 விழுக்காடாக அடுத்த பத்தாண்டுகளுக்குள் உயர்த்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன. சுமார் 2 கோடியே 8 லட்சம் மரக் கன்றுகள் பதியன் போடப்பட்டு, அவற்றை நடும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டம் தமிழ்நாட்டின் பசுமைப் போர்வையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், கார்பனை உள்வாங்கவும் பயன்படும். காலநிலை மாற்றம் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், தொழில்முனைவோர் என சமூகத்தின் அனைத்து மக்களுக்கும் கொண்டுசேர்க்க காலநிலை அறிவு இயக்கத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்தப்போகிறோம். இந்த அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைக்க இந்தியாவிலேயே முதல்முறையாக Tamil Nadu Green Climate Comapny உருவாக்கப்பட்டிருக்கிறது.

மீண்டும் மஞ்சப்பை இயக்கம் துவக்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்தையும் ஒருங்கிணைக்ககாலநிலை மாற்ற நிர்வாக குழு எனது தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு விஷயங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்த அரசு சாராத பலரும் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் இந்தளவுக்கு சுற்றுச்சூழலில் கவனம் செலுத்தவில்லை.

சமீபத்தில் ஏற்பட்ட புயல், மழை, வெள்ளம் ஆகியவை சூழலியல் பிரச்சினைகள் மீது அதிகமான கவனத்தை ஈர்க்கின்றன. அதைப் போலவே மகா கவிதையும் ஐம்பூதங்கள் மீதான அக்கறையை அதிகரிப்பதாக அமைந்துள்ளது. இந்நூலை கருத்து வாளை, அனைவரும் வாங்கி படிக்க வேண்டும். இந்தக் கவிதைகளைப் படிப்பதோடு, அதன்படி நடக்க வேண்டும். கவிப்பேரரசு உங்கள் தமிழ்க் கவிதையை தமிழ்நாடு பேசும், இயற்கை மானுடம் பேசும், இந்த ‘மகா கவிதை’யை உலகம் பேசும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

The post தலைவர் கலைஞரின் வரலாற்றை கவிதையாக நீங்கள் தரவேண்டும் இது என் அன்பு கட்டளை: வைரமுத்துவின் கவிதை நூலை வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,K. Stalin ,Chennai ,Vairamuthu ,Kamarajar Arena, Chennai ,minister ,P. ,Tamil Nadu Science and Technology Forum ,Mu. K. Stalin ,Dinakaran ,
× RELATED கோடைகாலத்தில் குடிநீர் தேவையை கருதி...