×

கல்லூரி மாணவர் தூக்குபோட்டு சாவு

புதுச்சேரி, டிச. 31: கல்லூரி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய கடிதத்தை கைப்பற்றிய போலீசார், அதன்பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி குருமாம்பேட் அமைதி நகரை சேர்ந்தவர் சாரங்கபாணி (49). தொழிலதிபரான இவர் சொந்தமாக டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவரது மகன் மாதவன் (23). கிராமப்புறத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்பிஏ 2ம் ஆண்டு பயின்று வந்தார். இவர் சமீபகாலமாக யாரிடமும் பேசாமல் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே சம்பவத்தன்று இரவு வீட்டில் உள்ள தனது அறைக்கு தூங்குவதற்காக சென்ற மாதவன் அங்கு கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரத்திற்குபின் மாதவனை பார்க்க அவரது அறைக்கு வந்த உறவினர்கள், பிணமாக தூக்கில் தொங்குவதை பார்த்து கதறி அழுதனர்.

உடனே இதுபற்றி மேட்டுப்பாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். எஸ்ஐ கலையரசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் சென்று, கல்லூரி மாணவரின் உடலை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக அவரது தந்தையிடம் புகாரை பெற்ற மேட்டுப்பாளையம் போலீசார், வழக்குபதிந்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், கல்லூரி மாணவரான மாதவன் சமீபகாலமாக யாரிடமும் பேசாமல் மனஅழுத்தத்தில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது அறையை சோதனையிட்ட போலீசார், மாதவன் தற்கொலை செய்வதற்கு முன் தந்தைக்கு எழுதிய உருக்கமான கடிதத்தை கைப்பற்றினர். அதில், எனக்கு வாழ விருப்பமில்லை, என் சாவுக்கு யாரும் காரணமில்லை என எழுதியிருந்தார். அதை கைப்பற்றிய போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post கல்லூரி மாணவர் தூக்குபோட்டு சாவு appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Sarangapani ,Puducherry Gurumpet Peace City ,
× RELATED சென்னை சாலிகிராமம் பத்மா சாரங்கபாணி...