×

ஆம்னி பஸ் கவிழ்ந்து 16 பயணிகள் படுகாயம்

 

பரமத்திவேலூர், டிச.31: பரமத்திவேலூர் அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 16 பயணிகளுக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெங்களூருவில் இருந்து கொடைக்கானலுக்கு, நேற்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஆம்னி பஸ் புறப்பட்டது. பஸ்சில் 24 பயணிகள், 2 டிரைவர்கள், கிளீனர் ஆகியோர் இருந்தனர். நேற்று காலை 5.30 மணியளவில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் தொலை தொடர்பு அலுவலகம் அருகே பஸ் வந்து கொண்டிருந்தது.

அப்போது, திடீரென பஸ்சின் முன்பக்க டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி, சாலையின் மைய தடுப்பை தாண்டி எதிர்பக்கம் உள்ள சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் இருந்த பயணிகள், டிரைவர்கள், கிளீனர் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி கூச்சலிட்டனர். இதை கண்டு, அவ்வழியாக சென்றவர்கள் பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், சம்பவ இடம் விரைந்து வந்த போலீசார், இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். அதில், படுகாயமடைந்த 16 பேரை, பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் தெலங்கானாவை சேர்ந்த ஆரியசாகர்(25), பெங்களூருவை சேர்ந்த சுஷ்மா (25), சென்னையை சேர்ந்த விக்னேஷ்(28) ஆகிய மூன்று பேர், மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  இந்த விபத்தால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய பஸ் கிரேன் மூலம் மீட்கப்பட்டதையடுத்து, போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. இந்த விபத்து குறித்து, பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post ஆம்னி பஸ் கவிழ்ந்து 16 பயணிகள் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Paramathivelur ,bus ,Bengaluru ,Kodaikanal ,Dinakaran ,
× RELATED கார்பைடு கல்லால் பழுக்க வைத்த 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்