×

ஷேர் மார்க்கெட்டில் அதிக லாபம் என ஆசை வார்த்தைகள் கூறி கட்டுமான பெண் தொழிலபதிர் உட்பட 60 பேரிடம் பல கோடி ரூபாய் மோசடி: பெண் கைது; கூட்டாளிகள் 2 பேருக்கு வலை

ஆவடி: ஷேர் மார்க்கெட்டில் அதிக லாபம் பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறி, கட்டுமான பெண் தொழிலபதிர் உட்பட 60 பேரிடம் பல கோடி ரூபாய் நூதன மோசடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளி 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை, முகலிவாக்கம் பகுதியை சேர்ந்த சரண்யா(35). இவர் சென்னை போரூரில் ‘தேவ் டரன்கி ப்ராஜெக்ட்’ என்ற பெயரில் கடந்த 3 வருடமாக கட்டுமான தொழில் செய்து வருகிறார். இவருக்கு, தன்னுடைய பிசினஸ் தோழிகள் மூலம் அறிமுகமான சீதாராமன் என்பவர் தனக்கு தெரிந்த நபர்களான கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த அருண்குமார், ரோஹித் மற்றும் ஜெயந்தி ஆகியோரை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

அவர்கள் சரண்யாவிடம், ‘‘ஷேர் மார்க்கெட்டிங் தொடர்பாக பயிற்சி நடத்துவதாகவும், அதில் ஒரு மாதம் பயிற்சி எடுங்கள்,’’ என்று கூறியுள்ளனர். இந்நிலையில், அவர்களின் வார்த்தையை நம்பிய சரண்யா அதற்குண்டான தொகையை கட்டி பயிற்சில் சேர்ந்தார். மேலும், பயிற்சி நடந்து கொண்டிருக்கும்போது ஷேர் மார்க்கெட் குறித்து ஆசை வார்த்தைகளைக்கூறி ஷேர் மார்க்கெட்டில் முதலிடு செய்தால் 15% லாபம் கிடைக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அருண்குமார், ரோஹித் மற்றும் ஜெயந்தி ஆகிய மூவரும் சரண்யா வீட்டிற்கு வந்து ரொக்கமாகவும் மற்றும் வங்கியின் மூலமாகவும் ரூ.89 லட்சத்தை பெற்றனர். இதேபோல் சுமதி என்பவரிடமிருந்து ரூ.1.64 கோடி மற்றும் சுமார் 60 நபர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டனர்.

பின்னர், லாபத்தொகை மற்றும் முதலீட்டு தொகையை திருப்பி கொடுக்காமல் மூவரும் தலைமறைவாகி விட்டார்கள். இது குறித்து சரண்யா கடந்த மாதம் ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். அதன்பேரில், ஆவடி காவல் ஆணையர் சங்கர், உத்தரவின்படி மத்திய குற்றப்பிரிவு மோசடி பிரிவு காவல் ஆய்வாளர் கீதா வழக்கு பதிவு செய்து, கோயம்புத்தூர், பெரியநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த ஜெயந்தி(37) என்பவரை கைது செய்து நேற்று சிறையில் அடைத்தார். மேலும் தலைமறைவாக உள்ள அருண்குமார் மற்றும் ரோகித்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post ஷேர் மார்க்கெட்டில் அதிக லாபம் என ஆசை வார்த்தைகள் கூறி கட்டுமான பெண் தொழிலபதிர் உட்பட 60 பேரிடம் பல கோடி ரூபாய் மோசடி: பெண் கைது; கூட்டாளிகள் 2 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Avadi ,Web for ,Dinakaran ,
× RELATED சென்னை ஆவடியில் சித்த மருத்துவர்...