×

கறி கடைக்காரருக்கு சரமாரி கத்திகுத்து: சிறுவன் உட்பட 3 பேர் கைது

பெரம்பூர்: பெரம்பூரில், கறிக்கடை வியாபாரியைகத்திால் குத்திய வழக்கில், சிறுவன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை பெரம்பூர் திம்மசாமி தர்கா தெரு பகுதியைச் சேர்ந்தவர் முகமது பர்வேஸ்(32).இவர் அதேபகுதியில் அரேபியன் கபாப் கறிக்கடை நடத்தி வருகிறார். இதற்கு முன்பு அயல் நாட்டு பூனைகள் வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 2 ம் தேதி மாலை இவர் அதேபகுதியில் நடந்து சென்றார். அப்போது அடையாளம் தெரியாத மூன்று பேர் அவரை வழிமறித்து அயல் நாட்டு பூனைகள் வேண்டும் என கேட்டுள்ளனர்.

அதற்கு முகமது பர்வேஷ் தற்போது நான் பூனை வியாபாரம் செய்வது கிடையாது எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக அவரை குத்திவிட்டு தப்பினர். இதில் படுகாயம் அடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தலையில் 10 தையல்கள் போடப்பட்ட நிலையில் முகமது பர்வேஸ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். புகாரின்பேரில், செம்பியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டார்.

அதில், திருவல்லிக்கேணி துலுக்கானாம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த இம்ரான் பாஷா(20), திருவல்லிக்கேணி தர்கா தெரு பகுதியைச் சேர்ந்த சையத் நதிம்(19), மற்றும் அதேபகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகியோர் முகமது பர்வேஷை தாக்கியது தெரியவந்தது. நேற்று காலை மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் ஏற்கனவே இவர்கள் முகமது பர்வேஷிடம் வெளிநாட்டுப் பூனைகளை வாங்கும்போது அவர் தரக்குறைவாக பேசி சண்டை இட்டு உள்ளார். அந்த ஆத்திரத்தில் குடிபோதையில் சம்பவத்தன்று அவரை வெட்டியதாக தெரிவித்தனர். இதனையடுத்து இம்ரான் பாஷா.சையத் நதீம் ஆகிய இருவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். 16 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

The post கறி கடைக்காரருக்கு சரமாரி கத்திகுத்து: சிறுவன் உட்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Perambur ,Perampur ,Mohammad Parvez ,Thimmaswamy Darga Street ,Perambur, Chennai ,Curry ,
× RELATED பெரம்பூரில் மாநகர பஸ் மோதி ஐடிஐ மாணவன் பரிதாப சாவு