×

பெருமழை, பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1,000 கோடி நிவாரண தொகுப்பு: சிறு வணிகர்களுக்கு ரூ.1 லட்சம் வரை சிறப்புக்கடன் திட்டம்; மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.350 கோடி கடன் உதவி; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: பெருமழை மற்றும் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1000 கோடி நிவாரணத் தொகுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சிறு வணிகர்களுக்கு ஒரு லட்சம் வரை சிறப்பு கடன் திட்டமும், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.350 கோடி கடன் உதவி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பு: தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்ட மழைவெள்ள பாதிப்பு நிவாரண உதவிகள் வழங்குவது குறித்து முக்கியமான அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டிருந்தார். அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

* சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள்,பழுது பார்த்தல்-ரூ.385 கோடி.
ஊரக வளர்ச்சித் துறை மூலம் முழுவதுமாக சேதமடைந்த வீடுகளை மீண்டும் புதிதாகக் கட்டுவதற்கு ரூ.4 லட்சம் வழங்கிடவும், பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ. 2 லட்சம் வரை வழங்குவது எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இத்திட்டம் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும். இதன் மூலம் ரூ.385 கோடி மதிப்பீட்டில் 4,577 புதிய வீடுகள் கட்டப்படும் .

* பயிர்ச்சேத நிவாரணம்-ரூ.250 கோடி.
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் சுமார் 2,64,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கென இழப்பீட்டு நிவாரணம் ரூ.250 கோடி வழங்கப்படும்.

* சிறு வணிகர்களுக்கு ரூ.1லட்சம் வரை சிறப்பு கடன் திட்டம்
சென்னை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் சிறு வணிகர்கள் பெரிய பாதிப்பைச் சந்தித்துள்ளனர். சிறு வணிகர்கள் மற்றும் சிறு கடை உரிமையாளர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 வரை 4 சதவீத வட்டி, ரூ.1 லட்சம் வரை 6 சதவீத வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படும்.

* குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ரூ.3 லட்சம் வரை வெள்ள நிவாரணக் கடனுதவித் திட்டம்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகத்தின் மூலம் “குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வெள்ள நிவாரணக் கடனுதவித் திட்டம்” என்ற சிறப்புத் திட்டம் தொடங்கப்படும். இதன்கீழ், ரூ.100 கோடி கடனாக வழங்கப்படும்.

* மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.350 கோடி கடன்
சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சார்ந்த மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் கடன் திருப்பம் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. நிவாரணக் கடன் தவணை மற்றும் வட்டியைத் திருப்பி செலுத்தவதற்கும் அவர்கள் பெற்றுள்ள கடனை மறுசீரமைப்பும் செய்து தரப்படும். மாநில மற்றும் மாவட்ட அளவிலான வங்கியாளர் குழுக் கூட்டத்தில் இதனை செயல்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில், நடப்பு ஆண்டில், கடன் பெறத் தகுதி வாய்ந்த மகளிர் 4,000 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.350 கோடி அளவில் புதிய கடன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* நிலுவையில் உள்ள கடன் தவணைகளுக்கு கால நீட்டிப்பு
கடன் தவணைகளை செலுத்திவதில் கால நீட்டிப்பு குறித்து மாநில அளவிலான வங்கியாளர் குழுவில் விரைவில் உரிய முடிவெடுக்கப்படும்.

* சேதமடைந்த மீன்பிடி படகுகளுக்கு நிவாரணம் – ரூ.15 கோடி
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாட்டங்களில் 4928 மீன்பிடி படகுகளும், இயந்திரங்களும் சேதமடைந்துள்ளன. இதற்கென நிவாரணத் தொகையாக ரூ.15 கோடி வழங்கப்படும்.

* கால்நடைகள் வாங்குவதற்கு கடன்
தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 17,000 கால்நடைகளும் 1 லட்சத்திற்கும் மேல் கோழிகளும் உயிரிழந்தன. இறந்த கால்நடைகளுக்கு நிவாரணமாக பசு, எருமைக்கு 37,500 ரூபாய் வரையிலும், ஆடு, செம்மறி ஆடு ஒன்றிற்கு ரூ.4,000 வரையிலும், கோழி ஒன்றிற்கு 100 ரூபாய் வரையிலும் வழங்கப்படும். புதிய கால்நடைகளை வாங்கிட ரூ.1.50 லட்சம் வரை புதிய கடன் வழங்கப்படும்.

* உப்பளத் தொழிலாளர்களுக்கு உதவித் தொகை-ரூ.3000
உப்பளத் தொழிலாளர்களுக்கு கூடுதல் வாழ்வாதார நிவாரணத் தொகை தலா ரூ.3000 வழங்கப்படும்.

* பள்ளி மற்றும் கல்லூரிச் சான்றிதழ்கள் மற்றும் பாடப் புத்தகங்கள் வழங்குதல்
வெள்ளத்தின் காரணமாக சான்றிதழ்களை இழந்த மாணவர்கள், அவர்கள் படித்த பள்ளியில் விண்ணப்பம் எழுதிக் கொடுத்தால் அவர்களுக்கு அந்த பள்ளித் தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வர் மூலமாக புதிய மாற்றுச் சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிய பாடப் புத்தகங்கள் அவர்கள் படிக்கும் பள்ளியின் மூலமாக வழங்கப்படும்.

* வருவாய்த் துறை மற்றும் இதர அரசுத் துறைகளில் வழங்கப்படும் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் வழங்குதல்
வருவாய்த் துறை மற்றும் இதர அரசுத் துறை ஆவணங்களை இந்த மழை வெள்ளத்தால் இழந்தவர்கள் புதிய ஆவணத்தை பெறுவதற்கு சிறப்பு முகாம்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் வரும் திங்கள்கிழமை தோறும் துவங்கப்படும்.

* வெள்ளத்தால் பழுதடைந்த வாகனங்களுக்கான காப்பீடு: தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் காப்பீட்டு நிறுவனங்களும், வாகன தயாரிப்பு நிறுவனங்களும், முகவர்களும் சிறப்பு முகாம்கள் நடத்தி தங்களது சேவைகளை துரிதப்படுத்திட தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறையின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வாகன பழுது பார்ப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரையில் 3,046 மோட்டார் வாகனங்கள் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக கொண்டுவரப்பட்டு அவற்றில் 917 வாகனங்கள் பழுது நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 2,129 வாகனங்களுக்கான பழுதுபார்ப்புப் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

The post பெருமழை, பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1,000 கோடி நிவாரண தொகுப்பு: சிறு வணிகர்களுக்கு ரூ.1 லட்சம் வரை சிறப்புக்கடன் திட்டம்; மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.350 கோடி கடன் உதவி; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Chennai ,M. K. Stalin ,Dinakaran ,
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...