தென்காசி, டிச.30: தென்காசி மாவட்டம் தனி மாவட்டமாக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை 25 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் தென்காசி தனி மாவட்டம் உதயமானது. தனி மாவட்டத்திற்கு தேவையான மாவட்ட நீதிமன்றங்கள் துவக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வலுப்பெற்ற நிலையில் தற்போது ஜனவரி மாதம் 13ம் தேதி மாவட்ட நீதிமன்றம் துவக்கப்பட உள்ளது என்று தென்காசி வழக்கறிஞர் சங்கத்தினர் தெரிவித்தனர். இதுகுறித்து தென்காசி வழக்கறிஞர் சங்க செயலாளர் புகழேந்தி கூறுகையில், தென்காசி மாவட்ட நீதிமன்றம் திறப்பு விழா தேதி 13.01.2024 முடிவு செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், தமிழ்நாடு சட்ட அமைச்சர் ஆகியோர்கள் பங்கேற்க உள்ளனர். மாவட்ட நீதிமன்ற துவக்க விழா பணிகளை ஆய்வு செய்வதற்காக நேற்று நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி சந்திரா, கூடுதல் மாவட்ட நீதிபதிகள் பத்மநாபன், பன்னீர்செல்வம், தென்காசி நீதித்துறை நடுவர் பொன்பாண்டி உள்ளிட்டோர் வந்தனர் என்று தெரிவித்தார். வழக்கறிஞர்கள் சின்னத்துரைபாண்டியன், கைலாசம், மாரியப்பன், வெங்கடேஷ், முருகன், மாரியப்பன், ராஜமறவன், ஸ்டீபன், காளிராஜ் ஆகியோர்கள் உடன் இருந்தனர்.
The post புதிய மாவட்டம் உதயமாகி 4 ஆண்டுகள் ஆன நிலையில் தென்காசி மாவட்ட நீதிமன்றங்கள் ஜன.13 முதல் செயல்பட துவங்கும் நீதிபதிகள், அமைச்சர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.